இப்பவே இப்படியா? நீங்க வந்தா மட்டும் போதும்! மாஜிக்களுக்கு வாய்ப் பூட்டு! எடப்பாடி & கோ கப்சிப்!
சென்னை : கடந்த சில நாட்களாக பாஜக தலைமையுடன் எடப்பாடி பழனிசாமி லேசான மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், இரு முன்னாள் அமைச்சர்களின் பேச்சால் பாஜக தலைமை கோபமடைந்துள்ளதாகவும், இத்தகவலை பெற்றுள்ள எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் பாஜக குறித்தோ, ஓபிஎஸ் தரப்பை மிகவும் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக தகவகல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக ஒற்றை தலைமை விவகாரம் அதிமுக அலுவலகத்தில் வெடித்ததில் இருந்தே செய்தியாளர் சந்திப்பு, சிறப்பு பேட்டிகள், ஆலோசனை என ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஊடகங்களிலும் பொதுவெளிகளிலும் பேசி வந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேர் எதிராக எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் வழக்கம்போல் அமைதியாகவே இருந்தார். பொதுக்குழு வரையிலேயே அவர் செய்தியாளர்கள் சந்திப்பை கூட தவிர்த்து வந்த நிலையில் ஆதரவாளர்கள் மூலமாக மட்டுமே தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார்.

அதிமுக மோதல்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சரி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் சரி எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக தனது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். ஆனாலும் ஓபிஎஸ்ஸை நேரடியாக விமர்சிக்காமல் துரோகம் செய்தவர், கழகத்திற்கு தீங்கு விளைவிக்க வேண்டுமென நினைப்பவர்கள் எனவே குறிப்பிட்டு பேசி வருகிறார். பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி விடலாம் என நினைத்திருந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் அது கைகூடாமல் போனதால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.

பாஜக ஆதரவு
மேலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் ஓபிஎஸ்க்கு சாதகமான நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், பாஜக ஆதரவு ஓபிஎஸ்க்குத் தான் இருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறி வருகின்றனர். இதுவும் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது வரை அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தனக்கே இருக்கிறது என நினைத்தாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் ஏதும் மாறுதல்கள் வந்துவிடுமோ என யோசனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திடீர் விமர்சனம்
இவற்றில் பாஜக தலைமையில் தலையீடு இருக்குமா என சந்தேகித்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக எடப்பாடி தரப்பு முன்னாள் அமைச்சர்கள் பாஜக தலைமைக்கு எதிராக பேசி வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசும் போது, தேசிய கட்சியாக இருந்தாலும் திமுகவாக இருந்தாலும் தனித்துப் போட்டியிட தயாரா எனக் கேட்டிருந்தார். காங்கிரஸ்-ஐ குறிப்பிடுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறியிருந்தாலும், அதனை நேரடியாகவே குறிப்பிட்டிருக்கலாமே என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாஜக தலைமையிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

வாய்ப்பூட்டு
இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி தரப்பில் உள்ள தீவிர ஆதரவாளரும், எம்.எல்.ஏவுமான கேபி முனுசாமி, பாஜக அமைச்சர்கள் ஆய்வு செய்வதை வெளிப்படையாகவும் நேரடியாகவும் விமர்சித்தார். இதுவும் பாஜக தலைமைக்கு சென்ற நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விடும் சமிஞ்கைகளாகவே இது கருதப்பட்டது. இந்நிலையில் இது போன்ற முன்னாள் அமைச்சர்களின் கருத்துகளால் பாஜக தலைமை கடும் கோபமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக சட்டமன்ற கூட்டத்தொடர் குறித்து மட்டுமே பேச வேண்டும், பாஜகவையோ ஓபிஎஸ்ஸையோ நேரடியாக விமர்சிக்க வேண்டாமென உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications