உறுப்பினராக கூட தகுதி இல்லை-சசிகலாவுக்கு எதிராக மாவட்டங்களில் தீர்மானம்- முடிவோடு ஈபிஎஸ் அடுத்த கேம்
சென்னை: அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் செல்லாமல் இருப்பதற்காக அதிரடியாக தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டங்களில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் பணியை தொடங்கி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவுக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா நடத்திய 24 மணிநேர வரவேற்பு யாத்திரை மிரட்டலாகத்தான் இருந்தது.
ஆனால் சசிகலாவை அன்றைய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் என ஒருவரும் வரவேற்கவில்லை. சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்தது அத்தனை பேரும் அமமுகவினர்தான். ஆனாலும் அசராத சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறேன் என பேட்டி எல்லாம் கொடுத்தார். ஆனால் அதிமுகவில் இருந்து ஈ, காக்கை கூட சசிகலா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
கைவிட்டது பாஜக... ஓ.பி.எஸ்-ன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கப் போகும் எடப்பாடி-சசிகலா
சசிகலா அறிக்கை
அத்துடன் சசிகலாவுக்கு அதிமுகவில் இடமே இல்லை என சீனியர் தலைவர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவை கைப்பற்றும் சசிகலாவின் திட்டம் உடனே நிறைவேறவில்லை. இதன்பின்னர் தேர்தலின் போது, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என அறிக்கை கொடுத்தார். அப்போது, அதிமுக சட்டசபை தோற்றால் கட்சி இயல்பாகவே தமது கைக்கு வரும் என கணக்குப் போட்டிருந்தார் சசிகலா.
சசிகலாவின் ஆடியோ அரசியல்
அவர் எதிர்பார்த்தபடியே தேர்தலில் அதிமுக தோற்றது. ஆனாலும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் சசிகலா வீட்டுக்குப் போய் சின்னம்மா வாங்க.. கட்சிக்கு தலைமை ஏற்று நடத்துங்க என கூப்பாடு போடவில்லை. அதற்கு மாறாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கியது. தாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை என்றாகிப் போய்க் கொண்டிருப்பதால் ஆடியோ அரசியலில் குதித்தார் சசிகலா.
தடாலடி எடப்பாடி
இதுவரை 40க்கும் மேற்பட்ட ஆடியோக்களை வெளியிட்டு அதிமுக தொண்டர்களை அசரடித்து கொண்டிருக்கிறார் சசிகலா. ஒருகட்டத்தில் எந்த நேரத்திலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா போவார் என்கிற சூழ்நிலையையும் திட்டமிட்டு உருவாக்கினார். இதற்கு மேல் பொறுப்பதில்லை என முடிவெடுத்த எடப்பாடி பழனிசாமி கையோடு அதிமுகவின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலேயே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைத்தார்; சசிகலாவை சேர்த்து கொள்ளலாமே என சன்னமாய் குரல் கொடுத்த ஓபிஎஸ்-வாய்ஸும் அடக்கப்பட்டுவிட்டது.
அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்
அத்துடன் சசிகலாவுடன் போனில் பேசியதாக சொல்லப்பட்ட நபர்கள் அதிமுகவில் இருந்தே டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். ஆனாலும் ஓயாத எடப்பாடி பழனிசாமி அணி தற்போது மாவட்டங்கள் தோறும் அதிமுக கூட்டங்களை நடத்தி சசிகலாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆகக் கூட தகுதி இல்லாதவர் சசிகலா; ஊழல் வழக்கில் சிறைக்குப் போனவர்... அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சதி செய்கிறார் என ஏகத்துக்குமான அர்ச்சனைகளுடன் இந்த அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏன் இந்த நடவடிக்கை?
சசிகலா பக்கம் தொண்டர்கள் போய்விடக் கூடாது என்பதற்காக அவர்களைத் தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் இந்த ஆயுதம் சசிகலா தரப்பே எதிர்பார்க்காத ஒன்றுதான். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை அடிமட்ட தொண்டணுக்கும் புரிய வைக்க எடப்பாடி பழனிசாமி எடுத்திருக்கும் இந்த அஸ்திரத்துக்கு சசிகலா தரப்பு என்ன பதில் தரும் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.