‘மூன்று முகம்’ டெல்லி ப்ரஷர்! எப்படி சமாளிப்பார் எடப்பாடி? டெல்லிக்கு சென்ற வலதுகரம்! புது ட்விஸ்ட்!
சென்னை : டெல்லி மேலிடத்தின் ஆதரவு, சசிகலா, டிடிவி தினகரன் உடன் இணைய திட்டம் உள்ளிட்ட அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஓபிஎஸ் நெருக்கடி அளித்து வரும் நிலையில் சற்று குழப்பம் அடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அவர் தரப்பில் மூத்த முன்னாள் அமைச்சர் ஒருவரை டெல்லிக்கு அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்? என்ற நிலையில்தான் அதிமுக தற்போது இருக்கிறது. முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவருமாகிய ஜெயலலிதா காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டோடு இருந்த இயக்கம் என சொல்லப்பட்ட அதிமுக தற்போது திசைக்கொன்றாக பிளவுபட்டு நிற்கிறது.
ஏற்கனவே கட்சியை விட்டு போன சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுகவில் குடைச்சல்களை கொடுத்து வரும் நிலையில், தற்போது மேலும் பிளவு பட்டு ஓபிஎஸ் இபிஎஸ் அணி எனப் பிரிந்து இருக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
2024 க்குள் சசிகலா, டிடிவி தினகரன், இபிஎஸ், ஓபிஎஸ்ஸை பாஜக இணைக்கும்.. மூத்த பத்திரிகையாளர் கருத்து
அதிமுக மோதல்
ஆட்சியை காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு தேவை என்ற நிலையில் அவரை ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் பதவிகளை அமர வைத்து அழகு பார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது ஆட்சியை இழந்த நிலையில் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதே நேரத்தில் திமுக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கொள்கை அதிமுகவின் பலம் வாய்ந்த அஸ்திரங்கள் ஒன்று. ஆனால் அதனை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீறிவிட்டார்கள் எனவும் திமுகவினருடன் மறைமுகமாக கூட்டணி அமைத்து செயல்படுகிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி திறப்பு குற்றம் சாட்டி வருகிறது.
பதவி ஆசை
இப்படி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினாலும் ஒற்றை தலைமையாக அதிமுகவில் தாங்கள் தான் இருக்க வேண்டும் என்ற பதவி ஆசையே தற்போது மோதலுக்குக் காரணம் என்கின்றனர் சசிகலா ஆதரவாளர்கள். இப்படி நாளுக்கு நாள் மோதல்கள், அறிக்கைகள், பேட்டிகள் என அதிமுக உட்கட்சி விவகாரம் களைகட்டி வரும் நிலையில் இறுதியாக டெல்லியில் இருக்கும் தேர்தல் ஆணையமும், பிரதமர் மோடியும் யாருக்கு ஆதரவாக தீர்ப்பளிக்க போகிறார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.
பிரதமர் மோடி
இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரம் காட்டினர். சென்னைக்கு வரும்போது எடப்பாடி பழனிச்சாமியும் சென்னையை விட்டு செல்லும்போது ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தனர். 10 நிமிடங்களே இந்த சந்திப்பு இருந்தாலும் தங்கள் தரப்பு வாதத்தை இருவரும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
மேலிடத்தின் ஆதரவு யாருக்கு?
ஆனால் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு என்பது தற்போது வரை தெரியவில்லை. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமான சில சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. டெண்டர் முறைகேடு வழக்கு ,முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா ஊழல் வழக்கு, ஆதரவாளர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை, தேர்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிற்கு அனுமதி என அடுத்தடுத்த பின்னடைவுகளால் சோர்ந்து போய் எடப்பாடி பழனிச்சாமி என்கின்ற விபரம் அறிந்த அதிமுகவினர்.
மூன்று முகங்கள்
இந்நிலையில் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகிய மூன்று முகங்களும் ஒன்றாக இணைந்து எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவில் இருந்து ஓரங்கட்ட முயற்சிப்பதாக கடந்த சில மாதங்களாக யூகங்கள் வெளியான நிலையில் இருதரப்பு ஆதரவாளர்களும் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் தேனி செல்வதற்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் தேனி மாவட்ட அதிமுக செயலாளருமாகிய சையது கான் டிடிவி தினகரனை நேரில் சந்தித்தார். இது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் விரைவில் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாகவும் அதற்கான தேதியும் குறிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திடீர் டெல்லி பயணம்
இப்படியான சூழ்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவில் மூத்த நிர்வாகியும் முதலில் நடந்த பொது குழுவில் மிக ஆவேசமாக பேசிய வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய நிர்வாகி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளளார். தேர்தல் ஆணைய கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில் இந்த முன்னாள் அமைச்சர் எதற்காக டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார் என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அதே நேரத்தில் அதிமுக பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தின் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் அது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசகர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் ஏற்கனவே சட்டம் தொடர்பான துறைகளை கவனித்து வந்ததால் டெல்லியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதாகவும் இதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அவரை டெல்லி அனுப்பி வைத்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர்.