ஓபிஎஸ்சுடன் சென்று, ஆளுநரை எடப்பபாடி பழனிச்சாமி சந்தித்தது ஏன்? 3 முக்கிய விஷயங்கள்
Recommended Video
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுநர் மாளிகையில், இன்று மாலை, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோருடன், திடீரென பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி.
இந்த சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி, நிருபர்களிடம், முதல்வரோ, அல்லது அவருடன் வந்தவர்களோ விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், இந்த சந்திப்பின் பின்னணியில் 3 காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடியார் திடீர் சந்திப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு!
டிஜிபி யார்
முதல் காரணம், தமிழக டிஜிபியாக யாரை நியமிப்பது என்பது தொடர்பான ஆலோசனை என கூறப்படுகிறது. தற்போது டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபியை நியமிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், ஜே.கே.திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட் உள்ளிட்டோர், டிஜிபி பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் உட்பட 14 சீனியர் அதிகாரிகள் பெயர், பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பிவைத்தது. திரிபாதியை டிஜிபியாக்க மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. தமிழக அரசு சாய்ஸ் ஜாபர்சேட்டாக உள்ளதாம். எனவே இதுபற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளர்
மற்றொரு முக்கிய விஷயம், புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது பற்றியது. 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி பொறுப்பேற்றார். இவர் ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றவர்களில் ஒருவராக இருந்தார். இவரது பதவிக்காலம் ஜூன் 30ஆம் தேதி, அதாவது இம்மாத இறுதியோடு முடிவடைகிறது. கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அதை அவர் ஏற்க விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் அடுத்த தமிழக தலைமை செயலாளரை நியமிப்பதில் தமிழக அரசு தீவிரமாகியுள்ளது.
போட்டிகள்
புதிய தலைமைச் செயலாளர் பதவிக்கான போட்டியில், மொத்தம், 5 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோரின் பெயர்கள் தீவிர பரிசீலனையில் உள்ளன. இந்த விவகாரம் பற்றியும், ஆளுநருடன் முதல்வர் மற்றும் அவருடன் சென்ற முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
7 தமிழர் விடுதலை
மேலும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று, நீண்டகாலமாக சிறையில் வாடும் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாகவும், ஆளுநரிடம், முதல்வர் ஆலோசித்துள்ளார். நேற்று டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து 7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்டது. இதனிடையே, இன்று, முதல்வரும், ஆளுநருடன் இதுபற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.