டெல்லியை நம்பும் பன்னீர்.. வேறொரு ‘ரூட்’ பிடிக்கும் ஈபிஎஸ்.. நெருக்கடி கொடுக்க 'பக்கா' ஸ்கெட்ச்!
சென்னை : ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டை நாடும் அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த காய்நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதற்காக, சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதேநேரத்தில், எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவைச் செயல்படுத்துவதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், பொதுச் செயலாளர் பதவி தேர்தலை கையில் எடுத்துள்ளதாம்.

15 நாளில் மாறிய ஆட்டம்
ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்றும், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீர்ப்பளித்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சரியாக 15 நாட்களில் ஆட்டமே மாறி, ஈபிஎஸ் கைக்குச் சென்றுள்ளது.

இடைக்கால பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த அமர்வு ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது. இந்த தீர்ப்பு மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார்.

மீண்டும் முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தேனியில் ஓபிஎஸ் நேற்று அறிவித்தார். அதே கையோடு காரிலேயே சென்னைக்கு கிளம்பினார். இந்நிலையில், வரும் திங்கட்கிழமை ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி சார்பிலும் உடனடியாக கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஈபிஎஸ் ஆலோசனை
இதுபோக, வேறொரு வேலையிலும் ஈபிஎஸ் தரப்பு தீவிரமாக இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்று வந்த தீர்ப்பின் மூலம், எடப்பாடி தரப்பு ரிலாக்ஸ் ஆகியுள்ளதால், இனி ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்கலாம் என இறங்கியுள்ளனராம். அடுத்தகட்டமாக, ஓபிஎஸ் தரப்புக்கு இன்னும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்தலாம் என ஆலோசித்து வருகின்றனராம்.

பொதுச் செயலாளர் தேர்தல்
ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உயர் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கியிருப்பதால், விரைவில் அந்தத் தேர்தலை நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுகவில் நிலவி வந்த குழப்பத்திற்கு உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. விரைவில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெறும், அதில் தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications