எடப்பாடி பார்வை டெல்லியை நோக்கி.. ஓபி.ரவீந்திரநாத்தை கட்டம் கட்ட அதிரடி திட்டம்.. அதுவும் போச்சா!?
சென்னை : ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த அத்தனை பதவிகளையும் பறித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அடுத்து ஓபிஎஸ் மகனான ஓ.பி.ரவீந்திரநாத் பக்கம் திரும்பியுள்ளார்.
ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை பறித்து ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கிய நிலையில், ஓபி ரவீந்திராத் அதிமுக எம்.பியே அல்ல என மக்களவை சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிஎஸ் தரப்பினரை முழுமையாக கட்சியில் இருந்து ஓரங்கட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டம் கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.

ஓபிஎஸ் நீக்கம்
ஓ.பி.எஸ் - ஈபிஎஸ் மோதலால் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டு அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பொதுக்குழுவிலேயே நீக்கப்பட்டனர். பின்னர், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டனர். ஆனால், அவர்களை நீக்கியது செல்லாது எனக் கூறி ஓபிஎஸ்ஸும் எடப்பாடி தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி வருகிறார்.

ஓபிஎஸ் இடத்தில் ஆர்பி உதயகுமார்
ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு அந்தப் பதவி திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. அடுத்ததாக ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கக்கூடாது என ஏற்கனவே ஓபிஎஸ் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் கடிதம் அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இனி இறுதி முடிவு எடுப்பார்.

ஓபிஎஸ் மகன்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத்தும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுக சார்பில் மக்களவையில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு எம்.பியான ஓ.பி.ரவீந்திரநாத்தையும் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதால், மக்களவையில் அதிமுகவின் பிரதிநிதித்துவம் பூஜ்ஜியமாகும். அதிமுகவின் நிலை மக்களவையில் ஜீரோ ஆகும் என்பதால் யோசித்து, பிறகு பூஜ்ஜியமானாலும் பரவாயில்லை என முடிவெடுத்து கொஞ்சம் லேட்டாகவே ஓ.பி.ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.

மக்களவை சபாநாயகருக்கு
இந்நிலையில் அ.தி.மு.க எம்.பி மற்றும் மக்களவைக் குழுத் தலைவர் என்ற அந்தஸ்துடன் இருக்கும் ஓ.பி.ரவீந்திரநாத்தின் அங்கீகாரத்தைக் குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளார். ஓ.பி.ரவீந்திரநாத் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் தகவலை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் மூலம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக உறுப்பினர் கிடையாது
ஓ.பி.ரவீந்திரநாத் குமார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் விவரங்களையும், தானே கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை என்பதற்கான பொதுக்குழு தீர்மானங்களையும் இணைத்து ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக உறுப்பினராக இல்லாமல் எந்தக் கட்சியையும் சாராத உறுப்பினராகச் செயல்படுவார்.
Recommended Video

4வது ஆள்
மக்களவையில் ஏற்கனவே 3 பேர் எந்தக் கட்சியையும் சாராத எம்.பிக்களாக இருந்து வருகிறார்கள். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நபா குமார் சரணியா , மகாராஷ்டிராவை சேர்ந்த நவ்னீத் ரவி ராணா, கர்நாடகாவைச் சேர்ந்த சுமலதா அம்பரீஷ் ஆகியோர் கட்சி சாராத சுயேட்சை எம்.பிக்களாக இருக்கின்றனர். ஓ.பி.ரவீந்திராத் நீக்கம் பற்றி எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கோரிக்கையை சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டால் அவர் நான்காவது கட்சி சாராத எம்.பியாக இருப்பார்.












Click it and Unblock the Notifications