ஸ்டாலின் கண்மூடித்தனமாக எதிர்ப்பு.. 20 தொகுதிகளை இழந்துள்ளோம்.. எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழ்நாடு தனக்குக் கிடைக்க வேண்டிய 20 கூடுதல் எம்பி சீட்டுகளை இழந்துள்ளது என்றும், 2011-ஆம் ஆண்டு சென்செஸ் படி தொகுதி மறுவரையறை செய்தால் 9 இடங்களை இழந்திருப்போம் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஸ்டாலின் கண்மூடித்தனமாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக இனி 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும்.. அப்படி செய்தால் நாம் தொகுதிகளை இழக்க போகிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்த விவாகரத்தில் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறுகையில், "தமிழ்நாடு தனது அரசியல் வலிமையையும், தனக்குக் கிடைக்க வேண்டிய 20 கூடுதல் நாடாளுமன்ற இடங்களையும் அதிகரிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இடங்களை 50% உயர்த்துவதற்கு வழங்கிய அந்தப் பொற்கால வாய்ப்பை நாம் இழந்தது மட்டுமல்லாமல்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஒரு பொம்மையைப் போலச் செயல்பட்டு, இந்த வாய்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், கண்மூடித்தனமாக அதை எதிர்த்தீர்கள்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற இடங்களை இழந்திருப்போம். உங்கள் மதியற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை செய்யப்படும். இதனால் தமிழ்நாடு இன்னும் கூடுதலான நாடாளுமன்ற இடங்களை இழக்கும் நிலை ஏற்படும்.
மேலும், 1998-இல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தலைமையின் கீழ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த நேரத்தில், உங்களது இப்போதைய 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் அந்த மசோதா நிறைவேறாமல் பார்த்துக் கொண்டன. இந்த முறையோ, நீங்கள் அந்த மசோதாவை எதிர்த்ததன் மூலம் அதன் நோக்கத்தையே சிதைத்துவிட்டீர்கள். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள பெண்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
மு.க. ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதைக் கொண்டாடுகிறீர்கள்? தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நீங்கள் ஏற்படுத்திய பாதிப்பையா அல்லது பெண்கள் முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் பாழாக்கியதையா?" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகரத்தை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகரித்துள்ள மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாட்டிற்கு இடங்கள் குறையும் அல்லது அதிகரிக்காது என்ற அச்சம் உள்ளது. இதை தான் எடப்பாடி பழனிசாமி வேறு கோணத்தில் தனது பதிவில் விமர்சித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை திமுக நிறைவேறாமல் செய்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் திமுக தரப்போ, இந்த மசோதோ நிறைவேற்றப்பட்டால், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தென்னிந்தியா இல்லாமலேயே அதிகாரத்திற்கு வர முடியும். அரசியல் சாசனத்தையும் மாற்ற முடியும் என்று கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் இதே கருத்தை வேறு மாதிரி கூறியது. தென்னிந்தியாவின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை எதிர்த்தது.














Click it and Unblock the Notifications