போனால் போகட்டும்.. ‘தாமரை’யை கழட்டி விடும் எடப்பாடி? மெகா கூட்டணிக்கு ‘அவங்களும்’ வர்றாங்களாமே?
சென்னை : அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர பாஜக தலைமை வற்புறுத்தினால் பாஜகவை கழட்டி விட தயாராகும் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சி இல்லையென்றால் திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியும் சில சிறிய கட்சிகளும் தங்கள் அணிக்கு வரும் என்பதால் தெம்பில் இருக்கிறார் என்கின்றனர் அவர் தரப்பு நிர்வாகிகள்.
பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் தான் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக இருக்கிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அக்கட்சியின் தலையீடு இருப்பதை துளியும் விரும்பாத எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம் இல்லை என உறுதியாகக் கூறிவிட்டார்.
ஆனால் இருவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே வருகின்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியும் என விரும்புகிறது. அதற்காக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், அதனை முற்றிலுமாக விரும்பவில்லை.

பாஜக அழுத்தம்
இந்நிலையில் பாஜக தலைமையுடன் எடப்பாடி பழனிசாமி விலகிச் செல்வது ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பிறகான நிகழ்வுகள் தனக்கு சாதகமாக இருப்பதாக கருதுகிறது ஓபிஎஸ் தரப்பு. டெல்லியில் தனது மகன் மூலம் ஓரளவு செல்வாக்கை உறுதிப்படுத்தி வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தற்போது அமித் ஷா வருகை மற்றும் பிரதமரின் வருகையின் போது உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

விரும்பாத எடப்பாடி பழனிசாமி
இதனால் பாஜக உடனான தொடர்பை பயன்படுத்தி ஏற்கனவே நிகழ்ந்தது போல மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக நினைக்கிறார். அதற்கான வேலைகளும் திரை மறைவில் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதனை முற்றும் விரும்பாத எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் இல்லாமலேயே தன்னால் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற முடியும் என நினைக்கிறார். இது குறித்து பாஜக தலைமையிடம் கூறியும் அவர்கள் செவி சாய்க்காததால் தற்போது தனது ஆதரவாளர்கள் மூலம் புதிய தகவல் ஒன்றை பரவ விட்டு வருகிறார்.

தேர்தலை சந்திக்கலாம்..
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது," வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அதிமுகவுக்கு மிக முக்கியமானது. சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் கணிசமான எம்எல்ஏக்களை பெற முடிந்தது. தற்போது மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 10 முதல் 15 எம்பிக்கள் வெற்றி பெற்றால் எடப்பாடி தலைமையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். எனவே அதனை எப்படியும் சாதித்துக் காட்ட வேண்டும் என நினைக்கிறார். அதே நேரத்தில் ஓபிஎஸ் கட்சியில் இணைந்தால் அவரது ஆதரவால் தான் வெற்றி பெற முடிந்தது என பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்பதால் அவர் இல்லாமலேயே தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்.

பாஜகவுக்கு கல்தா
ஒருவேளை பாஜக அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணியில் இருந்து விலகி விடலாம் என நினைக்கிறார். அதேபோல் பாஜக தரப்பு காரணமாக சிறுபான்மை வாக்குகள் மற்றும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர தயங்குகிறது. தற்போது திமுக தலைமையுடன் சில கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக இல்லாவிட்டால் தற்போதுள்ள ஒரு பெரிய கட்சியும் இரண்டு சிறிய கட்சிகளும் அதிமுக மெகா கூட்டணியில் இணையும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே பாமக உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த கட்சிகளும் வந்தால் சிறுபான்மை வாக்குகள் மற்றும் சில கட்சிகள் சமுதாய அமைப்புகளின் ஆதரவோடு குறிப்பிட தகுந்த வெற்றியை பெற்று விடலாம்.

தேர்தல் வேலைகள்
இது வருகின்ற மக்களவைத் தேர்தல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலுக்கும் அச்சாரமாக இருக்கும் என்பதால் பாஜக தலைமையில் அழுத்தத்தை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். பூத் கமிட்டி, தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்துங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது பரப்பப்பட்டுள்ள தகவல் ஆனது பாஜக தலைமையை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் அவருக்கு ஏதேனும் நெருக்கடிகள் கொடுக்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டாலும் அதனைச் சமாளிக்கவும் ஓ.பன்னீர்செல்வத்தை சமாளிக்கவும் தயாராகி வருகிறார் எடப்பாடி என்கின்றனர் சேலம் தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications