ஈபிஎஸ் போட்ட கணக்கு.. முந்திக்கொண்ட முதல்வர்.. அதே ரூட் பிடிக்கும் எடப்பாடி.. ‘லிஸ்ட்’ பறந்த ஆர்டர்!
சென்னை : எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்கிறார். அப்போது மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளாகத் தேர்ந்தெடுத்துச் செல்ல இருக்கிறாராம். அதற்காக, மழைநீர் அதிகம் தேங்கிய இடங்களை அதிமுக நிர்வாகிகள் லிஸ்ட் போட்டு ரூட் தயார் செய்துள்ளனராம்.
சென்னையில் கனமழையால் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நேற்று ஆய்வில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. அதேசமயம், முதல்வர் ஸ்டாலின், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்குவார் என கூறப்படுகிறது.

கொட்டித் தீர்த்த கனமழை
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதல் கடந்த இரு வாரங்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்ததால், அந்நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர் கனமழை காரணமாக, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களும் நீரில் மூழ்கின.

டெல்டாவுக்கு பயணம்
இதையடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டார். மேலும், கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், நிவாரண உதவிகளையும் வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 உடனடி நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

ஈபிஎஸ் ஆலோசனை
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சென்னை மட்டுமல்லாது டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதே ரூட்டில் ஈபிஎஸ்
அதோடு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் நாளை நேரில் ஆய்வு செய்ய இருக்கிறார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்குவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அப்பகுதி நிர்வாகிகளுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்பே திட்டமிட்டாரா?
எடப்பாடி பழனிசாமி, இந்த டெல்டா பயணத்தை நேற்றே நடத்த திட்டமிட்டதாகவும், அதற்காக அப்பகுதி நிர்வாகிகளை எல்லா ஏற்பாடுகளையும் செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நாளில் முதல்வர் டெல்டா பயணத்தை மேற்கொண்டதால் தனது பிளானை தள்ளிப் போட்டு சென்னையில் ஆய்வு செய்தாராம் எடப்பாடி பழனிசாமி. நாளை டெல்டா மாவட்டங்களுக்குச் செல்ல இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மழையால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஏரியாக்களாக தேர்ந்தெடுத்து செல்ல இருக்கிறாராம்.

எடப்பாடியின் சென்னை விசிட்
ஸ்டாலின், டெல்டாவில் ஆய்வு செய்துகொண்டிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, நேற்று சென்னையில் மழைநீர் தேங்கிய முகலிவாக்கம், மாங்காடு, கொளப்பாக்கம் ஆகிய இடங்களில் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசு சென்னையில் மழைநீரே தேங்கவில்லை என பொய் சொல்கிறது, மக்கள் இங்குய் படகுகளில் செல்வதை ஆட்சியாளர்கள் பார்க்கவில்லையா என கடுமையாக விமர்சித்தார்.

ஈபிஎஸ் போன இடத்தில்
எடப்பாடி பழனிசாமி நேற்று சென்ற இடங்களுக்கு இன்று சென்ற அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும், மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும், அப்பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதோடு நிவாரண உதவிகளையும் வழங்கினர். இனி மழை வந்தால் தண்ணீர் தேங்காதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்தனர். இந்நிலையில் தான், டெல்டாவிலும் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தேடித்தேடி சென்று திமுக அரசை விமர்சிக்க இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications