ஓபிஎஸ் பாணியில் தனி ஆவர்த்தனம்? அதிமுக லெட்டர் ஹெட் இல்லாமல் அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்!
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகளிடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தற்போது ஓ. பன்னீர்செல்வத்தை பின்பற்றி எடப்பாடி பழனிசாமியும் அதிமுக லெட்டர் ஹெட்டை பயன்படுத்தாமல் தனி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் போராடிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை.
கடந்த ஆண்டைப்போல்.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 கொடுங்கள்.. எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்
எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என அவரது ஆதரவாளர்களாகவே முடிவு எடுத்து அறிவித்தனர். இதில் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், அவ்வப்போது அதிமுக லெட்டர் ஹெட் இல்லாமல் தனியே அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
வழக்கமான கூட்டறிக்கை
பொதுவாக அதிமுகவின் லெட்டர் ஹெட்டுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்தே கூட்டறிக்கை வெளியிடுவது வழக்கம். இருவரது கையெழுத்துடன் கூடிய அறிக்கைதான் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான அறிக்கையாகவும் கருதப்பட்டு வந்தது.
ஈபிஎஸ் தரப்பு அதிருப்தி
ஆனால் ஓபிஎஸ் தமது அதிருப்தியை காட்ட கழக ஒருங்கிணைப்பாளர், அதிமுக என லெட்டர் ஹெட் இல்லாமல் தனியே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தி அடைந்திருந்தது.
ஈபிஎஸ் தனிஆவர்த்தனம்
இப்போது ஓபிஎஸ்-க்கு பதில் தரும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக லெட்டர் ஹெட் இல்லாமல் தனி அறிக்கை வெளியிட தொடங்கி உள்ளார். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை வழங்க கோரி இன்று எடப்பாடி வெளியிட்ட அறிக்கையில் அதிமுக லெட்டர் ஹெட் இடம்பெறவில்லை. எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் என தனியே அச்சிடப்பட்ட லெட்டர் ஹெட்டில்தான் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கே செல்லுமோ இந்த பாதை?