"இனி பாதிப்பு இருக்காது.. உழைச்சதுக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சுருக்கு" சென்னை மேயர் பிரியா நம்பிக்கை!
சென்னை: மழைநீர் வடிகால் பணிகளுக்கான போடப்பட்ட உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கிய நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே மழைநீர் வடிந்தது. இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளே காரணம் என்று பார்க்கப்படுகிறது. இருந்தும் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பாதிப்பு குறைவு
எனினும் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நடப்பாண்டில் மழை பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. சில பகுதிகளில் மழைநீர் தேங்கி இருந்தாலும், அவற்றை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேயர் பிரியா
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அலுவலகத்தை மேயர் பிரியா ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கடந்த ஆண்டு மழை காரணமாக சென்னை அதிகளவு பாதிப்பை சந்தித்தது. அதேபோன்று மீண்டும் சென்னை பாதிப்பை சந்திக்க கூடாது என்பதற்காக மழைநீர் வடிகால் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈடுபட்டோம்.

பாதிப்பு இருக்காது
இதற்காக மட்டுமே ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை செய்தோம். அதற்கான பணிகள் 95 சதவிகிதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 5 சதவிகித பணிகள் மேற்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் தீவிரமாக பணியாற்றி பணிகளை முடித்துள்ளோம். அதற்கான முடிவுகள் எங்களுக்கு கண்முன் தெரிகிறது.

நல்ல ரிசல்ட்
உழைப்பிற்கான ரிசல்ட் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையின் ஒவ்வொரு பகுதிகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு நடத்தினார். அதனால் நடப்பாண்டில் பாதிப்பு இருக்கக் கூடாது என்றே இலக்காக வைத்து பணியாற்றினோம். இதனால் மழையால் பாதிப்பு இருக்காது என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications