ஈகைத் திருநாள் எனும் புனித ரமலான் - நோன்பின் முக்கியத்துவமும் சிறப்புகளும்
புனித ரமலான் மாதத்தின் 30 நாட்கள் நோன்பு முடிந்த நிலையில் கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ரமலான் பண்டிகை நாளை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, 30வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது.
ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று சக மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை 'ஈதுல் ஃபித்ர்' என்றும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இஸ்லாமியர்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிடுவர். இஸ்லாமிய நாள்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலானில் நோன்பு தொடங்குவார்கள். சந்திர உதயத்தைப் பொருத்து பிறை தென்படுவதைப் பொருத்தும் சில நாடுகளில் கால வேறுபாடுகளுடன் நோன்பு தொடங்கும்.

30 நாட்கள் நோன்பு
ரமலான் மாதம் முழுவதும் அவர்கள் சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறைவது வரை உண்ணாமல், பருகாமல் விரதத்தைக் கடைபிடிப்பர். மேலும், புகை பிடிப்பது, இல்லற சுகம், தீயச் சொல் பேசுவது, தீய எண்ணங்களுக்கு இடங்கொடுப்பது, சண்டையிடுவது, வீண் பேச்சுப் பேசுவது, சோம்பல்வயப்படுவது என இவை எல்லாவற்றையும் ஒதுக்குவதும் நோன்பில் அடக்கம்.

5 கடமைகளில் ஒன்று
முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயம், நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் அது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் தூய்மையுடையவர்கள் ஆகிறீர்கள் என்கிறது இஸ்லாமிய இறைவாக்கு.

நபிகள் நாயகம்
ரமலான் மாதத்திற்கு இஸ்லாத்தில் இன்னொரு முக்கியத்துவமும் உண்டு. நபிகள் நாயகத்தின் வழியாக உலக மக்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது. அவ்வாறு இறை வாக்கு நபிகளுக்கு இறங்கத் தொடங்கியதும் ஒரு ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் ஒன்றில்தான்.

ஏழைகளுக்கு உணவு
ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயம் என்ற போதிலும் நோன்பிலிருந்து நோய்வாய்ப்பட்டோருக்கும் முதியவர்களுக்கும் இஸ்லாமிய இறை வாக்கு விலக்களிக்கிறது. ஆனாலும் அவர்கள் அதை ஈடுகட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது நியதி.

கேரளாவில் இன்று
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தலைமை காஜி சலாவுதீன் முகம்மது அயூப் தெரிவித்துள்ளார். கேரளாவிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ரமலான் பண்டிகைக் கொண்டாட்டம் இன்றே ஆரம்பித்து விட்டது.

அன்பு பரிமாற்றம் இல்லை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் பிடியில் உலகமே சிக்கியுள்ளது. நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் தங்களின் வீடுகளுக்குள்ளேயே தொழுகையை முடித்துக்கொண்டனர். ரமலான் தொழுகை காலத்தில் ஒன்றாக கூடித் தொழுது, கட்டித்தழுவி அன்பைத் தெரிவிக்க இயலாமல் போய் விட்டது என்ற குறை பலருக்கும் இருந்தாலும் இஸ்லாமிய பெருமக்கள் ஈகை பெருநாளை வீட்டிற்குள்ளேயே வழக்கமான உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

நோய்கள் தீர வழிபாடு
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப இந்த ஈகைத்திருநாள் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் நோய்கள் நீங்கவும் அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழவும் இறைவனிடம் கையேந்தி வேண்டிக்கொள்வோம்.












Click it and Unblock the Notifications