என்ன இப்படி ஆகிடுச்சு.. 2024 தேர்தல் பற்றி சென்னையில் நடைபெற இருந்த தேர்தல் ஆணைய கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நாளை நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இந்தியாவில் நடந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் 2 வது முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தது. இந்த அரசு பதவி காலம் ஜூன் 16 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஆளும் கட்சி பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தற்போதே தேர்தல் பணியில் இறங்கிவிட்டன. 3 வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா அல்லது இந்தியா கூட்டணி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. அரசியல் கட்சிகள் ஒருபக்கம் இப்படி தீவிரமாக பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக பணிகளில் முழு வீச்சில் இறங்கி இருக்கிறது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் 18 வது மக்களவைத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மார்ச் இறுதியில் தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை சென்னையில் தலைமைத் தேர்தல் ஆணையம் நடத்த முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அதிகாரிகள் சென்னை செல்ல உள்ளார்கள் என்றும் நாளை (ஜனவரி 8 ஆம் தேதி) நடைபெறும் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள், இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நாளை நடைபெற இருக்கும் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியரை நியமித்து தேர்தல் பணிகளை கண்காணிப்பார். இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளில் வெல்லும் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.












Click it and Unblock the Notifications