மகா., டெல்லி, மேற்கு வங்கம் ஓவர்! அடுத்து "தமிழ்நாடு அமைச்சருக்கு" குறி - ரெடியாகும் அமலாக்கத்துறை
சென்னை: மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தற்போது தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சொத்துக்குவிப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அரசியல் தலைவர்கள், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறி வைக்க அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கம்
அண்மையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமனம் செய்ததில் ஊழல் செய்ததாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில் மேற்கு வங்க தொழிற்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து இருக்கிறது. 2016 ஆம் ஆண்டு நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியானதால் அமலாக்கத்துறையும் இந்த விசாரணையில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா அமைச்சர்
உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தபோது மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக். ஷாரூக் கான் மகன் போதை மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது மத்தியில் ஆளும் பாஜக அரசையும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரையும் கண்டித்து பேசியவர். இந்த சூழலில் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளிடம் குறைந்த விலையில் நிலம் வாங்கியதாகவும், பல கோடி மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி இவரை பிப்ரவரி மாதம் கைது செய்தது அமலாக்கத்துறை. இதேபோல் மற்றொரு மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக் மோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

டெல்லி அமைச்சர்கள்
ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில் சுகாதாரத்துறை சத்யேந்திர ஜெயினை அமலாக்கத்துறை மோசடி வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். வகுக்கப்பட்டு உள்ள மதுபான கொள்கையில் தனியார் உற்பத்தியாளர்கள் லாபமடைந்து இருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து உள்ளார். இதனை கண்டித்து உள்ள முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், "சாவர்க்கர்களின் சீடர்கள் அல்ல நாங்கள், பகத் சிங்கின் பிள்ளைகள்" என்று விமர்சித்து இருந்தார்.

தமிழ்நாடு அமைச்சர்
இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து ரூ.6.5. கோடி மதிப்பு சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து அமைச்சர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெறுவதால் செப்டம்பர் வரை தள்ளிவைப்பதாகவும், அதுவரை அமலாக்கதுறை விசாரிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications