“தமிழ்நாட்டில் கட்டணம் உயர்த்தப்படாது.. AICTE சொல்வதையெல்லாம் கேட்க முடியாது”- அமைச்சர் திட்டவட்டம்!
சென்னை : தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர்த்தப்படாது. பழைய கட்டணமே அமலில் இருக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், பொறியியல் படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரித்து கடந்த வாரம் உத்தரவிட்ட நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி.
தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தேவை இல்லை என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
“பொறியியல் படிப்பு கட்டணம் உயர்வு.. இதுக்கு குறைவா வசூலிக்கக்கூடாது”- திட்டவட்டமாக தெரிவித்த ஏஐசிடிஇ
பொறியியல் கட்டணம் உயர்வு
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் ( ஏஐசிடிஇ) பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்து புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என இருந்த நிலையில் கட்டணத்தை உயர்த்தியது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம்.
அமைச்சர் பொன்முடி
இந்நிலையில், சென்னையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் இருக்கும். முதற்கட்டமாகச் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர் உள்ளிட்ட 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
பொறியியல்
மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்க லோசனைக் கூட்டம் நடைபெறும். நீட் மருத்துவக் கலந்தாய்வுக்குப் பிறகே பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். வரும் கல்வியாண்டிலும் ஆன்லைன் மூலமே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும். அரசுப் பள்ளிகளில் விண்ணப்பிப்பதற்கான வசதிகளைச் செய்து தர, பள்ளிக் கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
கட்டணம் உயர்த்தப்படாது
மேலும், ஏஐசிடிஇ பரிந்துரைகள் குறித்துப் பேசியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் பொறியியல் கட்டணம் உயர்த்தப்படாது. சென்ற ஆண்டு வசூலித்த கட்டணமே அமலில் இருக்கும். அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் பரிந்துரைகளை ஏற்க முடியாது. ஏஐசிடிஇ சொல்வதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.