பக்கா ஸ்கெட்ச் போட்டு அதிமுகவை கைப்பற்றிய ஈபிஎஸ்! முட்டி மோதி அவமானத்தை தேடிப் போய் வாங்கிய ஓபிஎஸ்!
சென்னை: அதிமுகவின் சர்ச்சைக்குரிய பொதுக்குழுவில் தமக்கே கட்சியில் ஆதரவு இருக்கிறது என்பதை அமர்க்களமாக நிரூபித்திருக்கிறார் மாஜி முதல்வர் ஈபிஎஸ் எனும் எடப்பாடி பழனிசாமி. அதேபொதுக்குழுவில் பங்கேற்று மிக மோசமான அவமானத்தை எதிர்கொண்டிருக்கிறார் மற்றொரு மாஜி முதல்வர் ஓபிஎஸ்.
Recommended Video
அதிமுகவின் இரட்டை தலைவர்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருந்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த போக்கை அனுமதித்துக் கொண்டிருந்த ஈபிஎஸ் தரப்பு ஒட்டுமொத்தமாக அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் கைப்பற்றிக் கொள்வதில் படுவேகம் காட்டியது.
சென்னையில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழுவில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டுவரவும் எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்திருந்தது.
இதனை ஏற்றுக் கொள்ள முடியாத ஓபிஎஸ் முதலில் பொதுக்குழுவுக்கு தடை கேட்டார்; பின்னர் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கேட்டார்.. போலீஸுக்கும் போனார்; நீதிமன்ற படிகளிலும் ஏறினார்.. இது தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் முதலில், பொதுக்குழு தீர்மானங்களில் தலையிட முடியாது என்றது; பின்னர் 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என்றது.
9 நாட்களுக்குப் பிறகு நேருக்கு நேராக.. ஒரே மேடையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்.. அன்னிக்கு கூட பார்க்கலயே..!
அவைத்தலைவர் தேர்வு
இந்த பரபரப்புக்கு நடுவே இன்று காலை அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவின் தொடக்கமாக அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவருமே தமிழ் மகன் உசேனை வழிமொழிந்தனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் பொதுச்செயலாளர் பதவிக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி அவைத்தலைவர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு தர வேண்டும் என்பதில் முடிவெடுக்கக் கூடியவர்களில் அவைத் தலைவரும் ஒருவர். அவைத்தலைவர்தான் பொதுவாக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களைக் கூட்டுவது அதிமுக மரபு.
அரங்கேறிய காட்சிகள்
ஓபிஎஸ்,ஈபிஎஸ் இருதரப்பும் ஏற்றுக் கொண்ட அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதன்பின்னர்தான் காட்சிகளை திட்டமிட்டபடி அரங்கேற்றியது எடப்பாடி தரப்பு. அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்க முடியாது; நிராகரிக்கிறோம் என முதலில் சிவி சண்முகமும் பின்னர் கேபிமுனுசாமியும் அறிவித்தனர். இதில் கேபி முனுசாமி, மாஜி ஓபிஎஸ் ஆதரவாளர். உயர்நீதிமன்றத்தில் சொன்னபடி தீர்மானங்கள் பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்டது. ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் இதனை நிராகரித்துவிட்டனர். ஆகையால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடாது என்பது எடப்பாடி அணியின் கருத்து.
2190 பேர் கோரிக்கை
அத்துடன் நிற்காமல் அடுத்த ட்விஸ்ட்டாக, 2190 உறுப்பினர்களின் கோரிக்கை மனு ஒன்றையும் சிவி சண்முகம் வாசித்தார்.2190 உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை அழுத்தம் திருத்தமாக சிவி சண்முகம் குறிப்பிடவும் காரணம் இருக்கிறது. பொதுக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைதான் இது.. தீர்மானம் அல்ல என்கிற சட்ட விளக்கத்துக்காகவே இப்படி கூறினாராம் சிவி சண்முகம். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, புதிய பொதுக்குழு ஜூலை 11-ல் கூடும் என முறைப்படி அறிவித்திருக்கிறார் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன். இதனை ஏற்க முடியாமல்தான் ஓபிஎஸ், வைத்திலிங்கம் வெளிநடப்பு செய்தனர்.
ஓங்கிய எடப்பாடி கை
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தபோதும், எப்போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தமக்கான பலத்தை வலுவாக்கிக்கொண்டேதான் வந்தது. அதிமுகவின் வேட்பாளர் தேர்வு, சசிகலா விவகாரம், முதல்வர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் பதவி என இத்தனை படிநிலைகளிலும் ஓபிஎஸ் தோற்றுக் கொண்டே வந்தார். இப்போது கடைசியாக ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறிகொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு ஓபிஎஸ்ஸை தள்ளிவிட்டிருக்கிறது எடப்பாடி கோஷ்டி. தொடக்கத்திலேயே ஓபிஎஸ் தரப்பு உஷாராகி இருந்திருந்தால் இத்தனை அவமானங்களையும் அத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஓபிஎஸ் எதிர்கொள்ள நேரிட்டிருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.