Premalatha: 41, 14, 104, 5! இப்போ 14! அதிமுக மா.செ. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்த நிலையில் தேமுதிகவை, கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன. தேர்தலையொட்டி தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கும் வருகை தரவுள்ளனர்.

பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள முடிந்து விடுமுறையின் போது இந்த தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். ஏனென்றால் பள்ளி, கல்லூரிகள் வாக்குச் சாவடி மையங்களாக செயல்படும். அது போல் வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் இடமாகவும் இது இருக்கும் என்பதால்தான் விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தல்
இந்த நிலையில் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கட்டும், நாம் நமது உழைப்பை கொடுப்போம் என்ற ரீதியில் அரசியல் கட்சிகள் பம்பரம் போல் உழைத்துக் கொண்டிருக்கின்றன.
பிரச்சாரங்கள்
ஒரு பக்கம் பிரச்சாரங்களும் மறுபக்கம் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் திமுக, அதிமுகவில் ஓரளவுக்கு கூட்டணிகள் சேர்ந்துவிட்ட நிலையில் தற்போது தேமுதிகவும் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் மட்டும்தான் இன்னமும் கூட்டணியில் இணையாமல் இருக்கின்றன.
தேமுதிக அதிமுக பேச்சுவார்த்தை
அந்த வகையில் தேமுதிக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. வழக்கமாக பிரேமலதா சொல்வது போல் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளித்து இடங்களை ஒதுக்கீடு செய்யும் கட்சியுடனே கூட்டணி என முனைப்பில் அக்கட்சி உள்ளது.
இரட்டை இலக்கம்
தேமுதிக கூட்டணி குறித்து அறிவிக்காமல் இருக்க காரணம், அக்கட்சி இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கேட்கிறது. ஆனால் திமுக, அதிமுகவோ ஒற்றை இலக்கத்தில்தான் ஒதுக்க முடியும் என கூறிவருகின்றன.
தேமுதிக டிமான்ட்
தேமுதிகவின் டிமான்ட்டில் இரட்டை இலக்கத்துடன் சேர்த்து ராஜ்யசபா சீட்டையும் கேட்டு வருகிறது. இதற்கு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஒப்புக் கொள்ளவில்லை.
6 அல்லது 7 வரைதான்
திமுகவை பொருத்தமட்டில் வெறும் 6 சட்டசபை தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்க தயாராக இருக்கிறதாம். மிஞ்சி போனால் 7 வரை செல்லலாம் என்கிறார்கள். ஆனால் தேமுதிகவோ தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் வேண்டும் என்பதால் கூட்டணி குறித்த அறிவிப்பை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார், வரும் தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தியிருந்தார்.
தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர
அந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், "தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருமாறு" கோரிக்கை விடுத்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் இழக்க மாட்டோம்.
14 கேட்கும் பிரேமலதா
தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அக்கட்சி 14 இடங்களை கேட்கிறது. அவர்களுக்கு 14 ஐ ஒதுக்கிவிட்டால் மற்ற கட்சிகளுக்கு என்ன செய்வது, எனவே 8 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்க தயார்.
இதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டால் கூட்டணியில் இணைத்துவிடலாம். ஆனால் சகோதரி பிரேமலதா பிடிவாதமாக 14 தொகுதிகளிலேயே நிற்கிறார் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாராம்.
2011 இல் நடந்தது என்ன
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு தேமுதிகவுக்கு ஒரு தேர்தலில் கூட வெற்றி வாய்ப்பே கிடைக்கவில்லை. அதாவது 14 ஆண்டுகளாக எதிலும் அக்கட்சி வெல்லவில்லை என்கிற போதிலும் தேமுதிக ஏன் 14ல் பிடிவாதம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
14 அதாவது, கூட்டுத்தொகை 5 என்பது தேமுதிகவுக்கு ராசியான எண் என பிரேமலதா கருதுகிறாராம். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கூட 41 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது.
2014 ஆம் ஆண்டு நடந்தது என்ன
அதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தொகுதியில் 14 இடங்களிலும், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவரை ஒரு இடத்தில் கூட தேமுதிக வெல்லவில்லை. ஆனால் தேமுதிக இந்த 5 எனும் ராசியான நம்பரை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications