ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் களம் இறக்கப்படுவாரா? - எச்.ராஜா சொன்ன பதில்!
சென்னை: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா, மக்களுடைய ஆதரவு பாஜக பக்கம் தான் என்றும், எதிர்காலத்தில் தோற்கடிக்க முடியாத கட்சியாக பாஜக இருக்கும் என்றும் பேசினார். மேலும் விரைவில் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் களம் இறக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதனால் தற்போதே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தோற்கடிக்க முடியாத கட்சியாக பா.ஜ.க.
"மக்களுடைய ஆதரவு பாஜக பக்கம் தான் தான் உள்ளது. எதிர்காலத்தில் தோற்கடிக்க முடியாத கட்சியாக பா.ஜ.க. இருக்கும். அந்த வகையில் அனைவரின் வீட்டிலும் பா.ஜ.க. அரசின் திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டம் சென்றடைந்து இருக்கும். இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு 30 வருடங்கள் 8 மாத 9 மாத குறைப்பிரவச அரசாங்கங்கள் இருந்தன.

எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய தலைமை
எல்லா தரப்பு மக்களுடைய வரவேற்பு பெற்ற அரசியல் தலைவர் இந்தியாவில் இல்லாமல் இருந்தது. ஆனால் மோடி வந்த பிறகு எல்லா மக்களும் ஏற்றுக்கொள்ள கூடிய வலிமையான தலைமை உள்ளது. கடலூரில் தேர்வுக்குழு கூட்டம் கூடுகிறது. அதனைத் தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஈரோடு சட்டசபை இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும். பா.ஜ.க. போட்டியிட்டாலும், அதன் கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் தேர்தல் குழு வேண்டும்.

இந்து விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப
நாங்கள் அந்த குழுவை அமைத்துவிட்டோம். தற்போது ஆளுங்கட்சி தேர்தலுக்கு முன்பு சொன்னதை எதையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியின் கீழ் செயல்படும் துறைகள் எதுவும் சரிவர செயல்படவில்லை. அதனால் எங்கள் தரப்பில் கூட்டணியையும் சேர்த்து, யார் வேட்பாளராக இருந்தாலும், இந்த ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லி, இந்து விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப பிரசாரம் செய்வோம்.

தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்பிவிட்டால்
அ.தி.மு.க.வின் இரட்டை இலை விஷயத்தில் தேர்தல் கமிஷனும், கோர்ட்டும் இதனை தான் முடிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாதிரி நாங்கள் சொல்ல முடியாது. அது எப்போது நடக்குமோ? அது நடக்கும். ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இது பொன்னான வாய்ப்பு. ஈரோடு தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீட்டுக்கு அனுப்பிவிட்டால், மறுநாளில் இருந்து அவர்களுக்கு பேச எதுவும் இருக்காது. அதனால் அவர்களே முடிவு செய்யவேண்டும்.

100 சதவீதம் மத்திய அரசு மானியத்தில்
உலக முழுவதும் தொற்று நோய் பாதித்தது. 2020 ஜூன் மாதத்தில் வெளிநாட்டு ஏடுகளில் கொரோனா தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை 50 கோடியாக இருக்கும். அதில் 5 கோடி பேர் இறந்து போவார்கள் என்று கட்டுரை எழுதினார்கள். உலகமே அப்படித்தான் பேசிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்தியாவில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்த அளவுக்கு திறமையாக மத்திய அரசு கையாண்டது. 2021 மார்ச்சில் இருந்து போன மாதம் வரை ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி 1 கிலோ பருப்பு 100 சதவீதம் மத்திய அரசு மானியத்தில் வழங்கப்பட்டது. இதில் திராவிட மாடலுக்கு எந்த பங்கும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications