ஈரோடு கிழக்கு தேர்தல்: பண்பட்ட கட்சி புண்பட வைக்காது..2 நாளில் முடிவு.. சஸ்பென்ஸ் வைக்கும் பாஜக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு 2 நாளில் வெளியிடப்படும் என்று நாராயண் திருப்பதி தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிப்பு குறித்து 2 நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பண்பட்ட கட்சி புண்பட வைக்காது என்றும் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. கூட்டணியில் உள்ள அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் யாருக்கு ஆதரவு கொடுப்பது? நடுநிலை வகிப்பதா? என்ற குழப்பம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் வேட்பாளரை நிறுத்துவது பற்றி கூட பாஜக பரிசீலிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தரப்பில் வைக்கும் வாதமாக உள்ளது. இத்தகைய சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் என்ன நிலைப்பாடு என்பது குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. 2 வெளிமாநில அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமனம்.. யார் இவர்கள்?பின்னணி
ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில்
பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அண்ணாமலை தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி ஆகியோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயண் திருப்பதி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி சரியான முடிவை எடுக்கும். ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியில் இருந்து அனைத்து தலைவர்கள், ஜான் பாண்டியன் என அனைவரும் இங்கு வந்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார்கள்.
திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்
எனவே அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து ஆராய்ந்து கட்சித் தலைமையோடு கலந்து ஆலோசித்து ஒரு முடிவை எடுப்போம். யாருடைய மனமும் புண்படாது. பண்பட்ட கட்சி புண்பட வைக்க்காது. அதனால் பிரச்சினையே கிடையாது. கவலைப்பட வேண்டாம். இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கும் பாஜகவிற்கும் தொடர்பும் கிடையாது. ஒரு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அங்கு திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். ஏற்கனவே பணப்பட்டுவாடா குறித்து அவர்கள் ஆலோசித்து கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையரிடம் இது குறித்து இன்று புகாரும் அளித்து இருக்கிறோம். நாங்கள் தேர்தல் களத்தில் மிக வேகமாக இருக்கிறோம்.
பணப்பட்டுவாடா நடக்கிறது
திமுக மிக மோசமான முறையில் பணப்பட்டுவாடா எப்படி செய்வது 5 ஆயிரம் கொடுப்பதா..10 ஆயிரம் கொடுப்பதா என முடிவு செய்து கொண்டு இருக்கிறார்கள்.. அதனால் இந்த தேர்தல் களம் திமுக வரக்கூடாது, திமுகவை எதிர்த்துத்தான் இந்த தேர்தலானது நடைபெறுகிறது. தேசிய ஜனநாயாக கூட்டணியுடைய வேட்பாளர் உறுதியாக இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. 2 நாட்களில் எங்கள் முடிவை அறிவிப்போம்.
2 நாட்களில் உறுதியாக முடிவு
அதிமுக காத்திருப்பதில் தவறு இல்லை. அதனால், என்ன இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் நாளே இன்றுதான் ஆரம்பித்து இருக்கிறது. இன்னும் 7 நாள் டைம் உள்ளது. ஊடகங்கள் டென்ஷன் ஆக வேண்டாம். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். திமுக பணத்தை அள்ளி குவிப்பதற்கு தயாராக உள்ளது. காங்கிரஸ் வேட்பாளருடன் சேர்ந்து அமைச்சர்கள் பணத்தை எப்படி பட்டுவாடா செய்யலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுகவிற்கு எதிராக பிரசாரம் தொடங்கப்பட்டு விட்டது. 2 நாட்களில் உறுதியாக முடிவை சொல்வோம்" என்றார்.