ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்.. நாளையும் ஆலோசனை-தினேஷ் குண்டுராவ்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வேட்பாளர் தொடர்பான ஆலோசனை நாளையும் நடைபெறும் என்று தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல், கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை அதிமுகவிற்கு விட்டுக் கொடுப்பதாக கூறி விலகிக் கொண்டது. இதனால், அதிமுக இந்த தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! மநீம சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறாரா? பாஜகவிடம் விட்டதை பிடிப்பாரா?
ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் போட்டி
அதேவேளையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அ.தி.மு.க சார்பாக வேட்பாளரை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிடும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை சந்தித்து அந்தக் கட்சியின் இரு அணிகளும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.
கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ
தேர்தல் களம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் வேப்ட்பாளர் யார்?என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர், "நான் போட்டியிட விரும்பவில்லை. இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கேட்டுள்ளேன். இருந்தாலும் கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்வேன். காங்கிரஸ் கட்சி வாய்ப்பு கொடுத்தால் எனது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார். காங்கிரஸ் வேட்பாளரை இன்னும் 2 நாளில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்" என்றார்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இதனால் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று இரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் கலந்து கொண்டார். கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
நாளை மீண்டும் ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த ஆலோசனை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், "காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக நாளை மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சி தலைமை அறிவிக்கும்" என்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் யார்?
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார்? என்பது நாளை அறிவிக்கப்படலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. அதேபோல், இவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.