தென்னரசுவிற்கு ஆதரவு..பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம்..தேர்தல் ஆணையத்தில் அளித்த தமிழ்மகன் உசேன்
தென்னரசுவிற்கு ஆதரவாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்துள்ள கடிதத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சென்னை: உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போகும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பியுள்ள கடிதங்களை தமிழ் மகன் உசேன் இன்று டெல்லி சென்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதிமுகவில் தென்னரசுவிற்கு ஆதரவாக 2501 பேர் கடிதம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத்தலைமை யார் என்று எழுந்த பஞ்சாயத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, இரு தரப்பில் இருந்தும் தனித்தனியே வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்து உள்ளார்.
இரு தரப்பும் தனித்தனியே வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். இதுதொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யும் நடவடிக்கைகள் சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமை சார்பில் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் விண்ணப்ப படிவம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த நோட்டீசை முறைப்படி பூர்த்தி செய்து 5ஆம் தேதி இரவு 7 மணிக்குள் ஒப்படைக்குமாறு, கட்சியின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தி இருந்தார். அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினரின் புகைப்படம், மற்றும் நோட்டரி பப்ளிக் சான்றுடன் இணைத்து, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரிக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதே நேரத்தில் தமிழ் மகன் உசேன் அனுப்பியுள்ள கடிதத்தில் அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி குறித்து எதுவும் இல்லாததால், அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி அதிமுக அவைத்தலைவர் செயல்படவில்லை என்றும், இதுபோன்ற சட்டமீறல் செயலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போகமாட்டோம் என்றும் கூறியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.
அதிமுகவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான வேட்பாளர் யார் என்பதில் உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வந்த நிலையில் தென்னரசுவிற்கு ஆதரவாக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த கடிதங்களுடன் அதிமுக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி புறப்பட்டனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2565 பேரில் 2501 பேர் தென்னரசுவிற்கு ஆதரவாக கடிதம் அளித்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஒருவர் கூட எதிராக வாக்களிக்கவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களில் 12 பேர் மறைந்து விட்டனர். 2 பேரின் பதவி காலாவதியாகி விட்டது. 17 பேருக்கு படிவம் சென்று சேரவில்லை.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தந்த வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனும், சி.வி. சண்முகமும் நேரில் சென்று அளித்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் நாளைய தினம் தனது முடிவினை அறிவிக்க உள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு தனது வேட்புமனுவை நாளை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications