காவிரி நீருக்காக தமிழக நடிகர் -நடிகைகள் குரல் கொடுக்காதது ஏன்? கொங்கு ஈஸ்வரன் சாட்டையடி கேள்வி!
சென்னை: காவிரி நீருக்காக தமிழக நடிகர் -நடிகைகள் குரல் கொடுக்காதது ஏன் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் போன்றோர் மௌனியாக இருக்கிறார்கள் என ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.

சினிமா நடிகர்கள் தங்கள் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களே தவிர தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமைகளுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போடவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
திரை பிரபலங்கள்: கர்நாடகா அரசின் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட ஆவண செய்ய வேண்டும். கடந்த காலங்களில் நம்முடைய காவிரி தண்ணீர் பிரச்சனையை கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும் என்று திரைத்துறையைச் சார்ந்த திரைப்பட நடிகர்கள் போராட்டம் நடத்தியதும் உண்டு.
மத்திய அரசை பார்த்து பயம்?: திரைப்பட இயக்குனர்களும் மற்றும் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் போராட்டங்களை முன்னெடுத்ததை எல்லோரும் அறிவோம் ஆனால் இப்போது திரைத்துறை சார்ந்த யாரும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டுமென்று கோரிக்கை கூட வைக்கவில்லை. தாங்கள் நடிக்கின்ற படங்கள் கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு வரும் என்பதற்காகவா? அல்லது ஒன்றிய அரசை பார்த்து பயமா?
ரஜினி -விஜய்: தமிழகத்தினுடைய சிஸ்டத்தை மாற்றி தமிழ்நாட்டை காப்பேன் என்று அரசியலுக்கு வர துடித்து பிறகு கைவிட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு குரல் எழுப்பாமல் உள்ளார். வருகின்ற தேர்தல் அல்லது அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பேன் என்று மும்பரமாக தன் ரசிகர்களை உசுப்பேத்தி கொண்டிருக்கின்ற நடிகர் விஜய் அவர்களும் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் மௌனியாக இருக்கிறார்.
படம் ஓடினால் போதுமா?: சினிமா நடிகர்கள் தங்கள் படம் கர்நாடகாவில் ஓட வேண்டும் என்பதில் தான் குறியாக இருக்கிறார்களே அல்லாமல் தமிழகத்திற்கான காவிரி நீர் உரிமைகளுக்காக ஒரு துரும்பை கூட எடுத்து போட தயங்குகிறார்கள். தமிழகத்தினுடைய டெல்டா மாவட்ட பயிர்களை காப்பாற்றவும் 1500 அடிகளுக்கு கீழே சென்று கொண்டிருக்கின்ற கொங்கு மண்டல நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் தமிழக மக்களால் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் திரைப்பட துறையினர் ஒன்று சேர்ந்து கர்நாடகா அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் கோரிக்கை வைக்க முன்வர வேண்டும்.












Click it and Unblock the Notifications