ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி.. திமுகவை குற்றம்சாட்டும் சீமான்!
சென்னை: எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கூட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்துள்ளார்
சிவந்த ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சீமான் சந்தித்தபோது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்தோடு நமது நாடு இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் என்ன வேலை செய்யும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பக்கம் எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களை விரட்டிவிரட்டி கைது செய்கிறது.

என்ஐஏ சட்டம்
அவர்கள் பிற மதங்களுக்கு எதிராக பணி செய்வதாக சந்தேகித்து கைது செய்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எங்கே இருக்கிறார்கள். என்ஐஏ சட்டத்தை அனைவரும் சேர்ந்துதான் கொண்டு வந்துள்ளார்கள். இந்த சட்டத்தின் மூலம் ஸ்டான் ஸ்வாமி, வரவர ராவ் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இபிஎஸ் ஆட்சியில் அனுமதி இல்லை
இந்த சூழலில் 50 இடங்களுக்கும் மேல் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கூட ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுதான் மதவாதத்திற்கு எதிரான முற்போக்கு கூட்டணியின் ஆட்சியா என்று விமர்சித்தார்.

சீமான் அறிக்கை
முன்னதாக தமிழகத்தில் உள்ள 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேபோல் செப்.28ம் தேதிக்குள் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆர்எஸ்எஸ் மதவாத இயக்கத்திற்கு அனுமதி அளித்தது ஏற்புடையதல்ல என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாமல், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எஸ்டிபிஐ வலியுறுத்தல்
இதேபோல் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியினரும் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications