சசிகலா வருகைக்கு "பச்சைக்கொடி" காட்டும் மகளிர் அணி செயலாளர்.. அதிமுகவிலிருந்து முதல் ஆதரவுக் குரல்?
சென்னை: சசிகலா வருகை குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும் என அதிமுக முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி கூறியிருப்பதை பார்த்தால் அவர் சசிகலாவுக்கு முதல் ஆதரவை தருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா அருகில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி தலைமையில், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, திமுகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல் டீசல், விலை ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தவில்லை, நீட் தேர்வை ரத்து செய்யாமல் மாணவர்களை ஏமாற்றுகின்றனர். மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவில்லை.
அழைத்து கருத்துக்கேட்ட மத்திய அரசு.. நன்றி சொன்ன கமல்.. ஸ்டாலின் ஆட்சி.. கேள்விக்கு சொன்ன பதில்
பொய் வழக்கு
அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுகின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பதாகைகள் ஏந்தி, முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேட்டியளித்த பா.வளர்மதி, நீட் தேர்வு என்பது முக்கிய பிரச்சினை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிறைவேற்றாத வாக்குறுதிகள்
ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தலின் போதே தெளிவாக மக்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை திமுக தெரிவித்து மக்களை ஏமாற்றி வருகிறது. தொடர்ந்து பேசிய வளர்மதி ஜெயலலிதா பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தை மறைக்க திமுக முயல்கிறது. அவரது பெயரை அழிக்க முடியாது என்றார்.
சசிகலா வருகை குறித்து கருத்து
அதிமுகவுக்கு சசிகலா வருகை குறித்த கேள்விக்கு வளர்மதி கூறுகையில் சசிகலா வருகை குறித்து, கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, சிவி சண்முகம், ஜெயக்குமார், ஓ பன்னீர் செல்வம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்கள் எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள்.
மகளிர் அணி செயலாளர்
இதுவரை அவர்களில் யாரும் கட்சி தலைமை முடிவு செய்யும் என கூறியதில்லை. ஆனால் மகளிர் அணி செயலாளர் வளர்மதி சொல்வதை பார்த்தால் சசிகலாவுக்கு அதிமுகவிலிருந்து முதல் ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இவர் சசிகலா அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.