EXCLUSIVE: சென்னையை தலைநகரா அறிவிச்சே ஆகணும்.. 2வது நாடாளுமன்றமும் கட்டுங்க: எம்பி ரவிக்குமார் "நச்"
சென்னையை நாட்டின் தலைநகராக அறிவியுங்கள் என்று எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை: "ஒருவேளை அப்படி 2-வதாக ஒரு பாராளுமன்றம் கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்களேன்.. யார் வேண்டாம்னு சொன்னது? குளிர்கால கூட்ட தொடரையும் சென்னையிலேயே நடத்துங்களேன்.. வட மாநிலங்களை சேர்ந்த எம்பிக்களும் தென் இந்திய பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இதுபோல் முன்னேறவேண்டும் என்ற உணர்வைப் பெறட்டுமே.. அதனால சென்னையை இந்தியாவின் தலைநகரமாக அறிவித்தே ஆக வேண்டும்" என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வலுவான அதேசமயம் ஆணித்தரமான ஒரு வேண்டுகோளை மத்திய அரசுக்கு விடுத்துள்ளார்.
Recommended Video
2வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை சில நாட்களாகவே தமிழகத்தில் எழுந்து வருகிறது.. "இல்லை, இல்லை.. எம்ஜிஆர் சொன்ன மாதிரி திருச்சியைதான் தலைநகராக அறிவிக்க வேண்டும்" என்று மாற்று கோரிக்கை எழுகிறது.
இவைகளுக்கு நடுவில் "நாங்கள் மட்டும் எந்த விதத்தில் குறைந்தவர்கள்" என்று கோயம்புத்தூர்காரர்கள் கிளம்பி விட்டனர்... இதனால் தமிழகமே சில தினங்களாகவே பரபரப்பாக உள்ளது.
சித்தி என அழைத்த கமலா ஹாரீஸ்.. அமெரிக்காவில் ராதிகாவின் சீரியலை டிரென்டாக்கிய தமிழர்கள்
2வது தலைநகரம்
இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் 2வது தலைநகரம் குறித்து பேசிவரும் நிலையில், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் புது விஷயத்தை முன்வைத்தார். "தமிழ்நாட்டுக்கு 2வது தலைநகர் தேவை என்கிறபோது இந்தியாவுக்கு தேவையில்லையா? இந்தியாவின் 2வது தலைநகராக சென்னையை அறிவிக்கவேண்டும்.... இதை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார்.
விவகாரம்
ரவிக்குமார் ஏன் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கிறார்? மாவட்ட அளவில் ஆளுக்கொரு தரப்பு விருப்பம் தெரிவிக்கும்போது, ரவிக்குமார் மட்டும் எதற்காக இந்திய அளவில் இந்த விவகாரத்தை கொண்டு செல்கிறார்? ஒருவேளை அவர் விருப்பப்படியே இந்தியாவின் தலைநகராக சென்னையை அறிவித்தால், அதன் தாக்கம் என்ன? அதன் நன்மைகள் என்ன? எதற்காக இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார் என்பதை அவரிடமே கேட்டோம்.. "ஒன் இந்தியா தமிழ்" வாசகர்களுக்காக எம்பி ரவிக்குமார் நம்மிடம் சொன்ன கருத்து இதுதான்:
ஒரே நாடு, ஒரே வரி
"மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றதற்கு பிறகு மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டிருக்கின்றன.. அவர்களுடைய நிதி அதிகாரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படுகிறது.. ஒரே நாடு, ஒரே வரி என்ற ஏற்பாட்டின் மூலமாக இன்று மாநிலங்கள் அவரவர் வருவாயை அவர்களுக்கு செலுத்திவிட்டு, தங்களுக்கு வர வேண்டிய பங்குக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டி இருக்கிறது.
உத்தரபிரதேசம்
இந்த தேசிய பெருந்தொற்று காரணம் காட்டி, மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, கொடுக்க முடியாது என்று மத்திய அரசு மறுத்து வருகிறது. இன்னைக்கு உத்தரபிரதேசத்தைவிட மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியை கொடுப்பது தமிழகம். இங்கே கொரோனா நோயாளிகளை சமாளிப்பதற்கு, அவர்களுக்கு உரிய சிகிச்சையை கொடுப்பதற்கு, மாநில அரசு நிதி இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது. அவர்களும் இதற்காக பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முயற்சி
ஆனால் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை. அதேபோல தேசிய கல்வி கொள்கை என்று அறிவிக்கப்பட்டிருப்பது, இந்தியை தமிழகத்தின் மீது திணிக்கும் ஒரு முயற்சியாக இருக்கிறது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருந்தாலும், அதற்கு மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல், அவர்களின் ஒப்புதலை பெறாமல் இஷ்டம்போல இந்த கல்வி கொள்கையை உருவாக்கி இருக்கிறது.
சட்டதிருத்தம் சட்டதிருத்தம்
மாநில அரசுகளின் ஒப்புதல் பெறாமல் மத்திய அரசு திணிக்கிறது.. அதுமட்டுமில்லை, சுற்றுப்புற சூழல் தாக்கம் மதிப்பீட்டு அறிக்கை தொடர்பாக அவர்கள் கொண்டு வந்திருக்கிற சட்டதிருத்தமும் மாநிலங்களை மதிக்கமல் அவர்களே தன்னிச்சையாக கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த சட்ட திருத்தத்தின் நகலை, மாநில மொழிகளில்கூட வழங்க முடியாது என்று மறுத்து வருகிறார்கள். மாநில மொழிகளில் வழங்க வேண்டும் என்று டெல்லி ஹைகோர்ட் சொல்லியும், மேல்முறையீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளனர்.
மத்திய அரசு
புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது... இப்போதைய நாடாளுமன்றம், அரசு அலுவலக கட்டிடங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது... இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
பெருந்தொற்று
ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் காலத்தில் இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிகவும் துரதிருஷ்டமானது.. பெருந்தொற்றில் இருந்து மீண்டு வர மாநிலங்களுக்கு தேவையான நிதியை அளிக்க மத்திய அரசு மறுத்து வரும் நிலையில் இது தேவையில்லாத ஒன்று. ஏற்கனவே சிறப்பு வாய்ந்த கட்டடம் ஒன்று அங்கு இருக்கும்போது, புதிதாக கட்டடம் தேவை இல்லை என்று எல்லாரும் அட்வைஸ் செய்தனர்.. ஆனால் பாஜக கேட்பதாக இல்லை.
பாராளுமன்றம்
அப்படி 2-வதாக ஒரு பாராளுமன்றம் கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்களேன்.. குளிர்கால கூட்ட தொடரையும் சென்னையிலேயே நடத்துங்களேன்.. வட மாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் தென் இந்திய பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இதுபோல் முன்னேறவேண்டும் என்ற உணர்வைப் பெறட்டுமே.. அதிகாரப் பரவலாக்கத்துக்கு சென்னை பாராளுமன்றம் அடையாளமாக திகழும் என்று திட்டவட்டமாக சொல்லி முடித்தார் ரவிக்குமார்.
ஆரோக்கிய விவாதம்
இந்தியாவில் ஒரு மாநிலமான இந்த தமிழ்நாட்டிற்கே துணை தலைநகர் என்றால், கண்டிப்பாக பரந்து விரிந்த இந்தியாவிற்கு 2வது தலைநகரம் தேவைப்படும் என்று ரவிக்குமார் முன்வைத்துள்ள இந்த கருத்து தேசிய அளவில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. இது சம்பந்தமான ஒரு ஆரோக்கியமான விவாதமும் சோஷியல் மீடியாவில் உருவாகி உள்ளது.. இப்படி ஒரு விவாதமும் இன்றைய சூழலுக்கு இன்றியமையாத ஒன்றே.. அந்த வகையில் ரவிக்குமாரை நாம் நிறையவே பாராட்டலாம்.