போட்டித்தேர்வுகளில் தமிழ் தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு - தமிழக அரசு அரசாணை
தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் முக்கியமான மற்றும் தேர்வர்கள் அதிகம் எதிர்நோக்கும் தேர்வுகளாக குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்தநிலையில், தமிழக அரசு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பணிகளில் சேர்வோருக்கு தமிழ் மொழி பற்றிய அறிவு அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இனி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே அரசுப் பணிகளில் சேர முடியும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ் மொழித் தகுதித் தேர்வு தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்வுகான பாடத்திட்டம் 10ஆம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வில், குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, குரூப் 4 தேர்வு மற்றும் தேர்வில் விருப்ப மொழிப்பாடப்பிரிவு நீக்கப்பட்டு தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஆங்கில மொழி பாடப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த தேர்வுகளில் முதல் பகுதியில் 100 வினாக்கள் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் மட்டுமே இடம்பெறும். இந்த தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 40 வினாக்கள் எடுத்தால் மட்டுமே, அடுத்த பகுதியான பொது அறிவுப் பகுதி மதிப்பிடப்படும். இருப்பினும் தமிழ் மொழி பாடப்பகுதி வினாக்களும் மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதாவது மொத்த மதிப்பெண்கள் தமிழ் மொழி மற்றும் பொது அறிவு பகுதிகளில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டுக் கணக்கிடப்படும். எனவே தமிழ் மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டு தாளாக அமைகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. 40%க்கும் குறைவான குறைபாடுகளை கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாணை பொருந்தும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications