அச்சுறுத்தும் R value.. சென்னை உட்பட பெருநகரங்களில் நிலைமை மிக மோசம்.. நாட்டில் விரைவில் 3ஆம் அலை?
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு நிலை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் மேல்நோக்கி செல்ல தொடங்கியுள்ளது. நாட்டில் பல மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்கிறது.
குறிப்பாக ஒமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை நாட்டின் பல மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 45 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்திகளும் ஓரிரு கெட்ட செய்திகளும்
கொரோனா பரவல்
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா 3ஆம் அலை குறித்த அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்டா கொரோனா பரவ தொடங்கிய போது, இதேபோலத் தான் வைரஸ் பாதிப்பு சில நாட்களில் மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், R Value எனப்படும் பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆய்வுகள்
மத்திய அரசு கொரோனா 3ஆம் அலை குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை என்றாலும் கூட, இந்தியாவில் அடுத்த அலை ஏற்பட்டதற்கான அறிகுறிகள் உள்ளன. தற்போது உயரத் தொடங்கியுள்ள கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தற்போதைய சூழலில் அடுத்த அலை எப்போது ஏற்படும் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது கடினம்.
பெருநகரங்கள்
இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எப்படி வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி, இப்போது உச்சத்தை நோக்கி நகர்ந்து வருகிறதோ, அதே ஒரு நிலைமை தான் இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நகரங்களில் மக்கள்தொகை மற்றும் ஜனநெருக்கடி அதிகமாக உள்ளது மட்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணமல்ல. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் முதலில் இந்த நகரங்களுக்குத் தான் வருவார்கள்.
R value
எனவே, இங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பது இயல்பான ஒன்று தான். எனவே, ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் போதும், இதுபோன்ற பெருநகரங்களிலேயே வைரஸ் பாதிப்பு முதலில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா பரவல் வேகத்தை R value என்பதைக் கொண்டு கணக்கிடுவார்கள். அதாவது வைரஸ் பாதிப்பு ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்குப் பரவுகிறது என்பது தான் R value.
அதிகம்
இது அனைத்து பெருநகரங்களிலும் 1ஐ தாண்டியுள்ளதாகச் சென்னையைச் சேர்ந்த சின்ஹா என்பவர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் நபர் 1க்கும் மேலாக நபருக்கு வைரஸ் பரப்புவதால் கொரோனா வேகமாகப் பரவும். குறிப்பாக டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் R value 2ஐ தாண்டியுள்ளது, அதாவது ஒரு கொரோனா நோயாளி 2 பேருக்கு வைரசை பரப்புகிறார். இதனால் தான் அங்கு வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது.
சென்னை
மற்ற பெருநகரங்களுக்கும் R value 1ஐ காட்டிலும் அதிகமாகவே உள்ளது. இதனால் சென்னை உட்பட பெருநகரங்களிலும் வைரஸ் பாதிப்பு அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் வைரஸ் பாதிப்பு கடந்த 2 வாரங்களாக அதிகமாக இருப்பதாகக் கூறி, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
டிசம்பர் மாதம்
கடந்த டிசம்பர் முதல் வாரம் தலைநகர் சென்னையில் 1088 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது டிச. 2ஆம் வாரம் 987ஆக குறைந்திருந்தது. இருப்பினும், 3ஆம் வாரம் இது 1039ஆக உயரத் தொடங்கியது. குறிப்பாக இந்த கடைசி வாரம் 1720 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.