உயர்மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்.. சென்னையில் மீண்டும் போராட முடிவு
சென்னை: விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாமக்கல், வேலூர், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள்2 வாரங்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தனர். உண்ணா விரத போராட்டம் தொடங்கி பல விதமான போராட்டங்களை இவர்கள் செய்து வந்தனர். அவர்களின் ஒரே கோரிக்கை தங்கள் நிலத்தில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என்பதுதான்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு இந்த மின்சாரம் கொண்டு செல்லப் படுகிறது. 13 மாவட்டங்களிலும் அதற்காக உயர் மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும். இந்த மின்சாரத்தில் ஒரு பகுதி கேரளாவுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் காரணமாக விளைநிலங்கள் பறிபோகும் என்று கூறி வேதனை அடைந்த 13 மாவட்ட விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்துக்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந் நிலையில் தாங்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழு அறிவித்துள்ளது. சென்னையில் வரும் 3ம் தேதி முதல் மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.