பையனுக்கு ஓட்ட பைக் தரும் பெற்றோரே உஷார்! சாலையில் பறிபோன மகனின் உயிர்! தந்தைக்கு வந்த சிக்கல்!
சென்னை: சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், ஓட்டுநர் உரிமம் இல்லாத மகனுக்கு, இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி அளித்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூர் வாக்கின் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் தீபக் பாலாஜி. இவர் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
தீபக் பாலாஜியின் நண்பரான திரு.வி.க. நகரைச் சேர்ந்த லோகேஷ், லயோலா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நண்பருடன் பயணம்
இந்நிலையில், தீபக் பாலாஜி, தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில், தனது நண்பரான லோகேஷுடன், கடந்த 26-ம் தேதி, அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் எடுக்காதது மற்றும் சரியான பயிற்சி இல்லாததால், நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

கல்லூரி மாணவர் உயிரிழப்பு
இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த லோகேஷ் படுகாயம் அடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தீபக் பாலாஜிக்கு, லேசான காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்ற வந்து வந்த லோகேஷ், மூளை சாவு அடைந்து, கடந்த மாதம் 6-ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சொல்லொண்ணா துயரம் அடைந்த அவரது பெற்றோர், லோகேஷின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்தனர்.

போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தீபக் பாலாஜி, 18 வயது நிரம்பாதவர் என்றும், இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமமும் இல்லாமல் விதிமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனத்தில் சென்றபோது தலைக்கவசம் அணியாமல் பயணித்ததும் விசாரணையில் அம்பலமானது. சரியான பயிற்சி இல்லாமல் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

மாணவரின் தந்தை கைது
இதனையடுத்து, 18 வயது நிரம்பாத, ஓட்டுநர் உரிமம் இல்லாத தனது மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதி அளித்த தீபக் பாலாஜியின் தந்தை சுப்பிரமணி மீது திருமங்கலம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுப்பிரமணியை நேற்று கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications