தமிழ் கடல் நெல்லை கண்ணன் உடலுக்கு இறுதி அஞ்சலி.. அரசு மரியாதை வேண்டும்..வேல்முருகன் கோரிக்கை
சென்னை: தமிழ் கடல் என்று போற்றப்படும் நெல்லை கண்ணன் உடல்நல குறைவால் காலமானார். அவரது உடல் நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி அவருக்கு புகாழாரம் சூட்டினர். மறைந்த நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார்.
Recommended Video
மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆன வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய நிகழ்ச்சியாக இருந்தாலும், பட்டிமன்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் நெல்லை கண்ணன் தான் சிறப்பாக இருப்பார் என்று புகழாரம் சூட்டினார்.
மறைந்த நெல்லை கண்ணன் உடலுக்கு அரசு சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ். எஸ் ஆர் ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இலக்கியவாதியும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன் இன்று காலமானதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் நெல்லை டவுன் அம்பாள் சன்னதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை அமைச்சர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில், நெல்லை கண்ணன் மறைவு செய்தி கேட்டு முதல்வர் அதிர்ச்சி கலந்த வருத்தம் அடைந்தார். உடனடியாக அவரது இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இரண்டு அமைச்சர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளோம்.
தமிழ் இலக்கியவாதியும் தமிழ்சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் மறைந்தது வருத்தமளிக்கிறது. முதல்வரும் நெல்லை கண்ணன் குடும்பத்தார் துக்கத்தில் பங்கெடுத்துள்ளார். முதல்வர் சார்பிலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என தெரிவித்தார். இந்த நிகழ்வில், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லைக்கண்ணன் மறைவு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது. நாடறிந்த பேச்சாளராகவும் தமிழறிஞராகவும் விளங்கிய 'தமிழ்க்கடல்' அய்யா நெல்லை கண்ணன் அவர்கள், அரசியல் தலைவர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மீது கருத்தியல் உடன்பாடு கொண்ட ஐயா அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருந்தார். மதவாதம் மற்றும் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் அவற்றுக்கெதிராக பெரும் கருத்தியல் போரை நடத்தி வந்த சிறந்த அறிவாளர் - கருத்துப் பங்களிப்பாளரான அய்யா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா நெல்லை கண்ணன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்.
மதவாதத்திற்கு எதிராக கருத்தியல் போர் நடத்தியவர் நெல்லை கண்ணன்! வேல்முருகன் வேதனையுடன் இரங்கல்!
அய்யா நெல்லை கண்ணன் அவர்களுடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் இலக்கியத்தை தன் சொற்களால் வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சியை மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள அய்யா நெல்லை கண்ணன் அவர்களை போற்றும் வகையில், அவரின் இறுதிச் சடங்கை முழு அரசு மரியாதையுடன் நடத்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என வேல்முருகன் கூறியுள்ளார்.