ஆப்பு இப்படியும் வருதா.. சென்னையில் காரை இப்படி மட்டும் நிப்பாட்டாதீங்க.. பறந்த ஃபைன்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் அடுத்தவர் வீட்டின் வழியை மறித்து காரை பார்க்கிங் செய்தவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் ஹெல்மெட் போடாமல் பல இடங்களில் சாதாரணமாக வண்டி ஓட்டுவார்கள். போலீஸ் இல்லை என்றால் யார் பிடிக்க போகிறார்கள் என்று பெரும்பாலும் ஹெல்மெட் போடுவதும் இல்லை. போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் பகுதிகளில் மட்டும் தான் ஹெல்மெட்டுடன் சுற்றுவார்கள். மற்ற நேரங்களில கழட்டி பைக்கின் முன் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இதுதான் சென்னையில் முன்பு கள எதார்த்தம்.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவார்கள். கார்களில் மறந்தும் சீட் பெல்ட் போட மாட்டார்கள்.அரை கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சிக்னல் இருந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒருவழி பாதையில் சென்று அசால்ட்டாக அபாயகரமாக சாலையை கடந்து போகவேண்டிய இடத்துக்கு போவார்கள். சிக்னலில் போலீஸ் இல்லை என்றால் சுத்தமாக மதிக்காமல் அப்படியே ஏறி செல்வார்கள். இப்படித்தான் சென்னையில் நீண்ட காலமாக இருந்தது.
ஆனால் சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த 4 மாதங்களாக எடுத்த அதிரடி ஆக்சனால் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படும் நிலை வந்திருக்கிறது.
கடந்த சில மாதங்களாக ஆபத்தான டிரைவிங், சிக்னலை மதிக்காமல் சென்றது, சிக்னலில் கோட்டை தாண்டி நின்றவர்கள், படிக்கவே முடியாத அளவிற்கு நம்பர் பிளேட் வைத்துள்ளவர்கள், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள், செல்போனில் பேசிய படி சென்றவர்கள் என சென்னையில் பலருக்கும் அபராதம் கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் பொதுமக்களின் சோதனையில் அபராதம் விதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தாங்கள் பார்க்கும் இடத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, தவறான வழியில் (ஒரு வழி) செல்வது, தவறான இடத்தில் பார்க்கிங் செய்வது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது, நம்பர் பிளேட் பிழையுடன் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறலில் யாரேனும் ஈடுபட்டிருப்பதை பார்த்தால் உடனே போட்டோ எடுத்து அல்லது வீடியோ எடுத்து சென்னை மாநகராட்சி போக்குவரத்து போலீசாரை ட்விட்டரில் டேக் செய்யலாம். அப்படி செய்தால் யாராக இருந்தாலும் உடனே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதை பார்த்த சென்னை போக்குவரத்து போலீசாரை டேக் செய்து தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகிறார்கள். அப்படி அளிக்கும்புகார்களில் நேரம், இடம் குறித்து தகவல்கள் இருப்பதில்லை. இதையடுத்து சென்னை பெருநகர காவல் ட்விட்டர் பக்கத்தில் முதல்முறையாக பதிவிடுவோர் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்தனர். அப்படி அறிவித்த பின்னர் போலீஸ் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரும் சிக்கி உள்ளார்கள்.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் அடுத்தவர் வீட்டின் வழியை மறித்து காரை பார்க்கிங் செய்தவருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 16 ம் தேதி ராஜ் என்பவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் எங்களை வெளியில் போக விடாமல், வீட்டின் கேட் முன்பு காரை பார்க்கிங் செய்துள்ளார். அவருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தை சிசிடிவியில் ஆராய்ந்த போலீசார், குறிப்பிட்ட காருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த சலானையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications