அபராதத்தால் விபத்தை தடுக்க முடியாது.. போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.. பாலகிருஷ்ணன்!
சென்னை: போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும் என்று சிபிஎம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அன்மைக்காலங்களாக அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகைகளை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டது.
அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அபராதம் உயர்வு
அதுமட்டுமல்லாமல் சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரமும் என அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒரே நாளில் ரூ.15 லட்சம் வசூல்
அத்துடன் மது அருந்திருவிட்டு வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் என அனைத்து விதமான போக்குவரத்து விதி மீறல்களுக்கும் அபராதம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அபராத முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ. 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

பாலகிருஷ்ணன் அறிக்கை
இந்த நிலையில் கடுமையான அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விபத்தை தடுக்க முடியாது
இத்தகைய அறிவிப்பானது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் சாலை விபத்துக்களையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னாலும் கூட, இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்து விட முடியாது.

சாலை வசதிகள்
தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும். எனவே, மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டும். போக்குவரத்து சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை கூடுதலாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications