தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறை.. எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய செயலர்.. ஏன்?
சென்னை : ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த முறை சட்டப்பேரவை செயலாளர் மூலம் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்த உரையே நீக்கப்பட்டிருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டமன்ற செயலர் இதுபோன்ற கடிதத்தை அளித்துள்ளார்.
ஆளுநரின் பேரவை உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்யக்கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.
சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தைப் பதிவு செய்கிறது என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆற்றிய உரை
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி பதவி ஏற்றதில் இருந்தே மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியானது என்று அண்மையில் ஆளுநர் பேசிய பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் ஜனவரி 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையிலிருந்து சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மத நல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்தார்.

உடனே தீர்மானம்
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தன. அத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை ஆளுநர் முன்னிலையிலேயே தெரியப்படுத்தி, ஆளுநர் வாசித்த உரையை அவைக்குறிப்பில் ஏற்றக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்த நிலையில், ஆளுநர் அவையில் இருந்து பாதியிலேயே கிளம்பினார். ஆளுநர் வாசித்த உரை அவைக்குறிப்பில் இடம்பெறாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் பொதுவெளியில் நிகழ்ந்து வருகின்றன.

ஆளுநர் உரைக்கு நன்றி - தீர்மானம்
ஆளுநர் உரையைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் மூலம் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், ஆளுநர் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தைப் பதிவு செய்கிறது என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.

நன்றியும் வருத்தமும்
அந்த தீர்மானத்தில், "தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்டு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு பேரவைக்கு வழங்கப்பட்ட உரையில் சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் ஆளுநர் உரையாற்றியமைக்கு இப்பேரவை தனது வருத்தத்தை பதிவு செய்கிறது. பேரவையின் மாண்பினை போற்றிடும் வகையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் நாளன்று பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநர் பேருரைக்கு இப்பேரவை உறுப்பினர்கள் நன்றி உடையவர்கள் ஆவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறை
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், ஆளுநர் உரை தொடர்பாக இதுபோன்று கடிதம் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெறுவது தான் வழக்கம். ஆனால், இந்த முறை ஆளுநர் ரவி வாசித்த உரையே நீக்கப்பட்டிருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, சட்டமன்ற செயலர் இதுபோன்ற கடிதத்தை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications