என் வீட்ல வெள்ளம் வந்துருச்சு.. நீங்க நல்லா இருக்கீங்களா? இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ
சென்னை: தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில், தனது வீட்டுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
நவம்பர் தொடக்கத்தில் இருந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது.

தொடர் மழை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

சென்னையில் மழை
குறிப்பாக நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. தற்போது சென்னையில் மழை விட்டு இருந்தாலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேங்கிய நீர்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. ஆனால், மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் செயல்பட்டு வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார்கள். இருப்பினும் ஆங்காங்கே மழை நீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளதுடன் குடியிருப்புகளுக்கு உள்ளேயும் புகுந்து இருக்கிறது.

மாநகராட்சி
இப்படி சென்னையில் தேங்கியிருக்கும் மழை, வெள்ள பாதிப்பு புகைப்படங்களையும், வீடியோக்களையும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்து சென்னை மாநகராட்சியை டேக் செய்து வருகின்றனர். இதற்கு சென்னை மாநகராட்சியும் உடனடியாக பதிலளித்து தேவையான உதவிகளை செய்து வருகிறது.

சந்தோஷ் நாராயணன்
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன், "என் வீட்டின் எதிரே 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. 3 மணி நேரத்துக்கு முன் என் வீட்டிற்கு உள்ளேயும் தண்னீர் புகுந்துவிட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா?" என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு உள்ளார்.

எந்த இடம்?
அவர் வெளியிட்டு உள்ள வீடியோவில், உள்ள தெரு பலகையில் ஸ்ரீ கணேஷ் நகர் முதல் தெரு என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், ஏரியாவின் பெயர் தெளிவாக இல்லை. பலரும் கொளப்பாக்கம் என்று கருத்திட்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்தோஷ் நாராயணன் ட்வீட்டுக்கு பதிலளித்த சென்னை மாநகராட்சி, "எந்த இடம் என்று குறிப்பிடுங்கள். உடனடியாக பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்." என்று பதிலளித்துள்ளது.

சாலை மோசம்
இதில் ட்விட்டர் பயனர் ஒருவர், கொளப்பாக்கம் என்றால் ஆவடி மாநகராட்சியை தொடர்புகொள்ள சொல்லுங்கள். அது சென்னை எல்லைக்குள் வராது. அதே நேரம் மணப்பாக்கம் சாலை நிலை ஆபத்தாக உள்ளது." என்று குறிப்பிட்டார். இதற்கும் சென்னை மாநகராட்சி பதிலளித்து உள்ளது.

பதில்
"மன்னிக்கவும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பிரச்சனைகளுக்கு மட்டுமே எங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். நெடுஞ்சாலை, மெட்ரோ பணிகளால் இதுபோல் சாலைகள் சேதமடைந்துள்ளன. நடவடிக்கை எடுக்க தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்." என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications