அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு... ஏரிகள் உடையும் - துல்லியமாகக் கணித்த பஞ்சாங்கம்
ஞ்சாங்கம் கணிப்பது எப்போதுமே பொய்ப்பதில்லை. ஐப்பசி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரிகள் உடையும் என்று பல மாதங்களுக்கு முன்பே தமிழ் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மழை வெள்ளம் இயற்கை பேரிடர்கள் பற்றி பஞ்சாங்கத்தில் நம்முடைய முன்னோர்கள் கணித்திருப்பார்கள். இந்த ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மழை வெள்ளம் பற்றி பிலவ வருடத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதத்தில் தமிழ்நாட்டில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஏரிகள் உடையும் என்றும் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை மழை வெள்ளம், 2016 வர்தா புயல் அதனையடுத்து வந்த புயல்கள் வெள்ளம் பாதிக்கப்படும் இடங்களைப் பற்றி பஞ்சாங்கம் கணித்திருந்தது. நவ கிரகங்களின் சஞ்சாரம், கிரகங்களின் பார்வை ஆகியவற்றைப் பொறுத்து இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்.
தமிழ் வருடமான பிலவ ஆண்டில் சனியின் சஞ்சாரம் மகர ராசியில் உள்ளது. சனியின் பார்வை மீனம், கடக ராசியிலும், துலாம் ராசியின் மீதும் விழுகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் பெருமழை கொட்டியது. சென்னையில் சற்றே ஓய்ந்த மழை கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கியது. இந்த மழை காலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது சென்னையும் கன்னியாகுமரியும்தான்.

ஏரிகள் உடையும்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துககுடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மொத்தமும் நிரம்பி வழிகின்றன. சென்னையிலும் கன்னியாகுமரியிலும் ஏரிகள், குளங்கள் உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆறுகளில் வெள்ளம்
மேட்டூர் அணை, பாபநாசம் அணை என பல அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து பல ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆறுகளில் திறந்து விடப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது மேடான பகுதிகளில் வீடு கட்டியவர்களும் வெள்ளநீரில் சிக்கித்தவித்து வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் பலத்த மழை பெய்யும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு கூட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியை சரியாக கணிக்காத நிலையில் துல்லியமாக ஆறு மாதத்திற்கு முன்பே சென்னை போக்குவரத்து பாதிப்பு, கனமழையை கணித்துள்ளது பஞ்சாங்கம்.

எங்கெங்கு மழை வெள்ளம்
இப்போது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என முன்பு வானிலை மையம் அறிவித்தது. இப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாவதில் தாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளது வானிலை மையம். தமிழ் பஞ்சாங்கத்தில் கார்த்திகை 3ஆம் தேதி நவம்பர் 19ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என கணித்துள்ளது.

கார்த்திகை முடியும் வரை கனமழை
இந்த ஆண்டு கார்த்திகை மாத இறுதி வரை மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், திருச்சியில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு வட கிழக்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது. இயற்கை பேரிடர்களை நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து துல்லியமாக கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications