சென்னையில் ஷாக்.. அதிமுகவிலிருந்து திமுகவுக்கு கட்சி மாறியவர் கொலை... ஒருவர் கைது, 4 பேர் சரண்!
சென்னை: பட்டப்பகலில் திமுக நிர்வாகி சவுந்தரராஜன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் வசந்த் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் சென்னையின் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நேற்று தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.
இதற்காக சென்னை 59 வது வட்ட திமுக செயலாளர் சவுந்தரராஜன் தண்ணீர் கேன்களை கொண்டு வந்தபோது அவரை சுற்றி வளைத்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரிமாரியாக வெட்டியது.

பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட திமுக நிர்வாகி
படுகாயமடைந்த சவுந்தரராஜன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது அவரை சுற்றிவளைத்த கும்பல், கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் துடிதுடிக்க உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ராஜீவ் காந்தி மருத்துமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் தீவிர விசாரணை
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த படுகொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகள் யார் என தீவிர விசாரணையில் இறங்கினர். பேருந்து நிலையம் மற்றும் அருகே உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொலையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண போலீசார் முயன்றனர்.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய சவுந்தரராஜன்
போலீசாரின் விசாரணையில் கொல்லப்பட்ட சவுந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்தவர் என்றும், சமீபத்தில்தான் திமுக சேர்ந்தார் என்பதும் தெரியவந்தது. கொல்லப்பட்ட சவுந்தராஜனுக்கு முன்விரோதிகள் யாரேனும் உள்ளார்களா? அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட கொலையா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையில் இறங்கியது.

ஒருவர் கைது; 4 பேர் சரண்
இந்த நிலையில், இன்று காலை கொலை வழக்கு தொடர்பாக சென்னை பிராட்வேயை சேர்ந்த வசந்த் என்பவரை எஸ்பளனேடு போலீசார் கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான கணேசன் என்பவரது மகன் தினேஷ், அவரது உறவினர் இன்பா உள்ளிட்ட 4 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.












Click it and Unblock the Notifications