இப்போ தாவுனாதான் சரியா இருக்கும்.. தட்டித் தூக்கிய செங்கோட்டையன்! கு.ப.கிருஷ்ணன் தவெகவில் எப்படி?
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றியவர் கு.ப.கிருஷ்ணன். 1991-1996 காலகட்டத்தில் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க முகமாக இருந்த அவர், இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். இதன் மூலம், நீண்ட அரசியல் பயணத்துக்குப் பிறகு கு.ப.கிருஷ்ணன் புதிய அரசியல் பாதையில் கால் பதித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கு.ப.கிருஷ்ணன், தனது அரசியல் வாழ்க்கையை அதிமுகவில்தான் தொடங்கினார். ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்ற அவர், வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய காலகட்டத்தில் விவசாயிகள் மத்தியில் கவனம் பெற்ற தலைவராக இருந்தார்.
அதன் பின்னர், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுகவிலிருந்து விலகிய அவர், 'தமிழர் பூமி' என்ற தனிக்கட்சியை தொடங்கி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ஆனால், அந்த முயற்சி நீண்ட காலம் தொடரவில்லை. தமிழர் பூமி கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

கு ப கிருஷ்ணன்
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம், மீண்டும் சட்டமன்றத்தில் இடம் பிடித்த கு.ப.கிருஷ்ணன், அதிமுகவில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக செயல்பட்டார். பின்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை சந்தித்தார். அதன்பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
நடிகர் விஜய்
அந்த அணியில் இருந்த காலகட்டத்தில், கட்சிக்காக தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டாலும், பின்னர் ஓபிஎஸ் அணியிலிருந்தும் விலகி, சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்நிலையில், தமிழக அரசியலில் புதிய மாற்றங்கள் உருவாகி வரும் சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கு.ப.கிருஷ்ணன் தவெகவில் இணைந்தார். விஜய் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தது, தவெக அரசியலில் அனுபவமிக்க தலைவர்களின் வருகை என பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் கூடாரம்
ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த அனுபவம், சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட பின்னணி, பல்வேறு அரசியல் கட்டங்களை கடந்து வந்த அனுபவம் ஆகியவற்றைக் கொண்ட கு.ப.கிருஷ்ணனின் தவெக இணைவு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. கு.ப.கிருஷ்ணனின் பிளவின் மூலம் ஓபிஎஸ் கூடாரம் கிட்டத்தட்ட மொத்தமாக காலியானதாகவே சொல்லப்படுகிறது.
திமுக
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், வைத்தியலிங்கம், சுப்புரத்தினம் உள்ளிட்ட அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். மேலும் சில முன்னாள் அமைச்சர்களும் அவரது ஆதரவாளர்களும் திமுக தரப்புக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி உடன் ஓர் அணியில் இருந்த போது ஓ .பன்னீர்செல்வம் மிகுந்த போராட்டங்களுக்கு இடையே தனது ஆதரவாளரான தர்மருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பெற்று தந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி
தற்போது அவரும் எடப்பாடி பழனிச்சாமி அணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணையாக இருந்த சீனியர்களில் ஒருவரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் நிலையில் அவர் மூலமாக கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் மேலும் சிலரும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையலாம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications