துரோகம்! இபிஎஸ்-ஐ கட்சியை விட்டு கழட்டி விடலாம்! ‘அவருக்கு’ அதிகாரம் இருக்கு! போட்டுடைத்த புகழேந்தி!
சென்னை : ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும் எனவும், அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிரடியாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தூபம் போட அது பற்றி தீயாக எரிந்து வருகின்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் ஒருபுறமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனிதனியாக தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறன்னர்.

அதிமுகவில் மோதல்
தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக இந்த ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்றும் ஆறாவது நாளாக இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மூத்த நிர்வாகிகள் தீவிரமாக முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒற்றை தலைமை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமாதான பேச்சு
அதனை உறுதிப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களை உறுப்பினருமான தம்பிதுரை ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி யை சந்தித்த பிறகு ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதில் பல்வேறு சமாதான பேச்சுக்களையும், சில முக்கிய ஆஃபர்களையும் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை ஏற்க போவதில்லை என்ற முடிவில் விடாப்பிடியாக இருக்கிறார் பன்னீர்செல்வம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓபிஎஸ் உறுதி
பொதுக்குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் முன்னர், தீர்மான குழு மூலம் எழுதப்பட்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும். அப்படிக் கையெழுத்திட்டால் தான் அது அடுத்த கட்டத்திற்குச் செல்லும். எனவே ஒற்றைத் தலைமையை தவிர எந்த தீர்மானம் குறித்தும் தான் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும் , ஒற்றை தீர்மானம் என்ற வார்த்தை இருந்தால் தான் கையெழுத்திட போவதில்லை என உறுதியாக தெரிவித்து விட்டார் பன்னீர்செல்வம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் எடப்பாடி தரப்பு இருந்தாலும் கட்சியில் தங்களுக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர் இருப்பது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

ஓபிஎஸ்-க்கு அதிகாரம்
அதே நேரத்தில் இபிஎஸ்-ஸை கட்சியை விட்டு நீக்கம் செய்யும் அளவுக்கு ஓபிஎஸ்-க்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளரான புகழேந்தி. அதிமுக தொண்டர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஓபிஎஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்கு கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது.

ஈபிஎஸ் துரோகம்
ஈபிஎஸ் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். ஒன்றிய, மாவட்ட, நகர செயலாளர்கள் யாரும் இதில் முடிவெடுக்க முடியாது. தொண்டன்தான் முடிவெடுக்க முடியும். ஓபிஎஸ்சை எடுக்க வேண்டும் என முடிவு செய்தால் இரண்டு பொதுக்குழுதான் நடக்கும். அதிமுகவில் நிலவும் ரவுடியிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான்" என பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications