கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இதைச் செய்யுங்கள்... முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் யோசனை
சென்னை: கொரோனா தொற்று நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா பாதிப்பு மிகுந்த 6,000 தெருக்களிலும் முழுமையாக பரிசோதனை நடத்தி பாதிப்பு உள்ளவர்களை தனியார் கல்லூரிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதேபோல் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கினால் யாரும் வீட்டை விட்டு வெளியில் சுற்ற முன்வரமாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தாமல் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்றும், முதலில் நோய் தொற்றை கண்டறிவதற்கான வசதிகளை இன்னும் அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் வாய் சவடால் மட்டும் இருந்தால் போதாது செயல்பாட்டில் தீவிரம் காட்ட வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள், லேப் டெக்னீசியன்கள், ஆகியோருக்கு எந்த வகையிலும் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை அரசு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 3 நாட்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் கூறிய நிலையில், இன்று இந்த தொற்று எல்லை மீறி போய் உள்ளதாக எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இது அதிமுக அரசு இல்லை.. ஆளும் அரசு.. இன்னும் டெஸ்ட்டுகளை அதிகரியுங்கள்.. மக்கள் உங்கள் பக்கம்!
இனியும் தாமதமின்றி தனியார் கல்லூரிகள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்து, நோய் தொற்றுள்ளவர்களை போதிய இடவசதியுடன் தனிமைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் அரசு செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.