ராஜேந்திரபாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகி.. யார் அவர்?.. வெளியான முக்கிய தகவல்!
சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தலைமறைவான ராஜேந்திரபாலாஜி
ஆனால் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வந்தனர். மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சிக்காமல் தப்பித்து வந்தார்
மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ராஜேந்திர பாலாஜி போலீசாரின் கையில் சிக்காமல் தப்பித்து வந்தார். வேறு, வேறு கார்களில், வேறு, வேறு இடங்களுக்கு மாறி, மாறி சென்று வந்ததால் அவரை பிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

அதிரடி கைது செய்தனர்
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை தமிழகம் அழைத்து வந்து விருதுநகர் மாவட்ட போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடைக்கலம் கொடுத்த பாஜக நிர்வாகி
ராஜேந்திரா பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆவார். இவர்தான் ராஜேந்திர பாலாஜிக்கு தங்குமிடம், உணவு, வாகன வசதியை ஏற்படுத்தி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ராமகிருஷ்ணனின் உறவினரும் பாஜகவை சேர்ந்தவருமான நாகேஷ் என்பவர்தான் ராஜேந்திர பாலாஜிக்கு கார் ஓட்டியுள்ளார். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications