சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் பலி
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் ஆம்புலன்சில் காத்திருந்த நான்கு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு ஏழாயிரத்திற்கும் மேல் பதிவாகி வருவதால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
Recommended Video
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை விட, சென்னையிலும் பாதிப்பு கூடுதலாக இருக்கிறது. நேற்று ஒரேநாளில் 30,355 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 293 பேர் உயிரிழந்தனர். இதில் 131 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 162 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள 785 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இருப்பினும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தினசரி ராஜீவ்காந்தி மருத்துவமனை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தடுப்பூசி
படுக்கைகள் கிடைக்காததால் அவர்கள் ஆம்புலன்சிலேயே மருத்துவமனைக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்தனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாயிலில் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றன.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் யாரேனும் டிஸ்சார்ஜ் ஆனாலோ அல்லது இறந்தாலோதான் மற்ற நோயாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த சூழலில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 4 நோயாளிகள் உயிரிழந்தார். படுக்கைகள் முழுவதும் நிரம்பியதால், சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுக்கைகள் காலியான பின்னரே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் ஏராளமான நோயாளிகள் ஆம்புலன்ஸ்சில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.