சாட்டை துரைமுருகனுக்கு எதிரான ஃபாக்ஸ்கான் ஆலை அவதூறு வழக்கு: போலீஸ் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் எழுந்தன. இதற்கிடையே விடுதியில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

சிகிச்சை
உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பாதிக்கப்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருப்பினும், சில பெண்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து விடுதி நிர்வாகம் முறையாகப் பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த பெண் ஊழியர்கள் சனிக்கிழமை அதிகாலை சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சிகிச்சை பெற்றுவரும் பெண்களிடமும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காலில் பேசினார். மேலும், கெட்டுப்போன உணவு அளித்த விடுதி வார்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விடுதியில் ஆய்வு நடந்தது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

சாட்டை துரைமுருகன்
இந்த சம்பவம் தொடர்பாகச் சாட்டை துரைமுருகன் தனது ட்விட்டரில் வதந்தி பரப்பும் வகையிலான கருத்துகளை பதிவிட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்தது. சாட்டை துரைமுருகன் அவருடைய முதல் ட்வீட்டில், விடுதியில் உள்ள 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டிருந்தார் அடுத்த ட்வீட்டில், 9 பெண்கள் இறந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

கைது
இந்தச் சூழலில் ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக வதந்தி பரப்பியதாகச் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி தில்லைநகர் க்ரைம் போலீசார் சாட்டை துரைமுருகனைக் கைது செய்துள்ளனர். ஃபாக்ஸ்கான் ஆலை பெண் ஊழியர்கள் உயிரிழந்ததாக அவர் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவர்மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது.

வழக்கை ரத்து செய்
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சாட்டை துரைமுருகன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மீதான இந்த வழக்கின் அடிப்படையில் தான் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார் .












Click it and Unblock the Notifications