ஸ்ரீபெரும்புதூர் ஆலை நிர்வாகம் கூண்டோடு மாற்றம்.. ஃபாக்ஸ்கான் அதிரடி- நேரில் ஆய்வு செய்யவும் முடிவு
சென்னை: உணவு உட்பட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை எனக் கூறி ஸ்ரீபெரும்புதூர் செல்போன் ஆலையில் பணியாற்றப் பெண் ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஆலை நிர்வாகத்தைக் கூண்டோடு மாற்ற ஃபாக்ஸ்கான் முடிவு செய்துள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரப்படுவதில்லை என்ற புகார்கள் உள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை...2 நாட்களுக்கு பனிமூட்டம் - வானிலை மையம்
ஏன் போராட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதியில் வழங்கப்பட்ட இரவு உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் சில பெண்கள் மட்டும் விடுதி திரும்பாததால் சக ஊழியர்கள் பதற்றமடைந்தனர். இது தொடர்பாக ஆலை நிர்வாகமும் முறையாகப் பதில் அளிக்காததால் போராட்டத்தில் இறங்கினர்.
பேச்சுவார்த்தை
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஃபாக்ஸ்கான் பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஃபாக்ஸ்கான் தொழிலாளர்களின் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது.
கூண்டோடு மாற்றம்
இதனிடையே தொழிலாளர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசும் உத்தரவிட்டது. இந்தச் சூழ்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனது ஆலையில் நிர்வாகிகளை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முழு ஊதியம்
மேலும், ஊழியர்கள் தங்கும் வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் ஃபாக்ஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். ஆலையின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் வரை அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தைத் தொடர்ந்து கடந்த டிச.18 முதல் ஆலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கை
அதேபோல ஆப்பிள் நிறுவனமும் இது தொடர்பாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது குறித்து ஃபாக்ஸ்கான் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள ஆப்பிள், ஊழியர்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் உள்ள வசதிகளை நேரில் ஆய்வு செய்ய தணிக்கையாளர்களையும் அனுப்பியுள்ளது. சில இடங்களில் உள்ள தங்குமிடம் மற்றும் சாப்பாட்டு வசதிகள் திருப்திகரமாக இல்லை என்றும் ஆலை மீண்டும் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பு சப்ளையருடன் (ஃபாக்ஸ்கான்) இணைந்து நிலைமை மேம்படுத்தப்படும் என்றும் ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.