செஸ் ஒலிம்பியாட்.. வெளிநாட்டு பயணிகளுக்கு சொகுசு பஸ்.. அடையார் டூ மாமல்லபுரம் வரை ப்ரீயா போகலாம்!
சென்னை : சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டியைக் காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்காக 10 சொகுசு பேருந்துகள் இக்கப்படுகின்றன. அடையார் முதல் மாமல்லபுரம் வரை அவர்கள் இலவசமாக பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரமாண்ட போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். செஸ் ஒலிம்பியாட் போட்டி கோலாகலமாக நாளை துவங்குவதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவற்காக, சென்னை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் வீரர், வீராங்கனைகளுக்கு எந்தவித தடையின்றி, தங்கும் விடுதிகளுக்கு செல்ல சிறப்பு வாகன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர செஸ் போட்டியை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகளும் சென்னை வந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகவும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக மாமல்லபுரம் பகுதியில் சுற்றுலா நட்பு வாகனம் என்ற பெயரில் 25 ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆட்டோக்களை சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று தொடங்கி வைத்தார். வெளிநாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள் பயணம் செய்யும்போது அதிக கட்டணம் கேட்கக்கூடாது என்றும், இன்முகத்துடன் சரியான கட்டணம் வாங்க வேண்டும் என்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலா பயணிகள் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு வசதியாக 10 சொகுசு பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன. மாமல்லபுரத்தில் இருந்து 5 பேருந்துகளும், சென்னை அடையாறில் இருந்து 5 பேருந்துகளும் அவ்வப்போது சென்று வரும். இதில் பயணம் செய்வதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. விளையாட்டு வீரர்கள் வசதிக்காக சுற்றுலா தலங்களில் பேருந்துகள் நின்று செல்லவும் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.