திமுகவினருக்கு டிச.இல் வந்த புத்தாண்டு பரிசு! அமைச்சராகும் உதயநிதி! 19 மாதங்களில் அமைச்சரானது எப்படி
சென்னை: கடந்த சில மாதங்களாகவே உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தொடர்ந்து தகவல் வெளியாகி வந்த நிலையில், ஒரு வழியாக இப்போது அது நடக்க உள்ளது. வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். தீவிர அரசியலில் குதித்தது முதல் அமைச்சராவது வரை என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிர அரசியலில் இருந்து வருகிறார்.
இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக அக்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்தச் சூழலில் வரும் புதன்கிழமை அவர் அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இளைஞர்களே வாங்க.. அன்பகத்திலிந்து அன்பாக அழைத்த உதயநிதி! அடுத்த சில மணி நேரத்தில் “குட் நியூஸ்”
உதயநிதி
தயாரிப்பாளராகும் நடிகராகவும் மக்களிடையே அறிமுகமான உதயநிதி முரசொலியின் நிர்வாக இயக்குநராகவும் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அவர் தீவிர அரசியலில் இறங்கினார். இதற்கு முன்பும் கூட அவர் தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இணைந்து நடத்தப்பட்டது. அப்போது தான் முதல்முறையாக உதயநிதி தமிழ்நாடு முழுக்க பிரசாரம் செய்தார். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 40இல் 39 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இளைஞரணி செயலாளர்
அப்போது வரை அவருக்குக் கட்சியில் எந்தவொரு பதவியும் வழங்கப்படாமலேயே இருந்தது. அவருக்குப் பதவி வழங்க வேண்டும் என்று பல மாவட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம், திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். அதன் பிறகு சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் அவர் பயணித்து வந்தார். 2021 சட்டசபைத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அதன்படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது.
பிரசாரம்
இந்தத் தேர்தலில் 69,355 வாக்குகள் வித்தியத்தில் அவர் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றார். அப்போது உதயநிதி தனது தொகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுக்க பயணித்து பிரசாரம் செய்தார். அவரது பிரசாரத்திற்கு மிகப் பெரியளவில் ஆதரவு இருந்தது. குறிப்பாக எய்ம்ஸ் செங்கல் உள்ளிட்ட விஷயங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது. இதையடுத்து திமுக ஆட்சி அமைத்த நிலையில், அப்போதே அவர் அமைச்சராகப் பதவியேற்பார் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், அப்போது அவருக்கு அமைச்சர் பதவி எதுவும் தரவில்லை. இருந்த போதிலும், எம்எல்ஏவாக அவர் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார்.
தீர்மானங்கள்
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பல அமைச்சர்கள் இதேபோல வெளிப்படையாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போதே செயல்படாத சில அமைச்சர்களை நீக்கிவிட்டு அமைச்சரவையில் மாற்றம் வரலாம் எனக் கூறப்பட்டது. குறிப்பாக, சில மூத்த அமைச்சர்களுக்குப் பதிலாக இளம் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என திமுக சார்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அப்போது அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் நடக்கவில்லை. பின்னர் அந்தப் பேச்சு அப்படியே அமைதியானது.
மூத்த அமைச்சர்கள்
இந்தச் சூழலில் மீண்டும் அவரை அமைச்சராக்க வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. அதிலும் கடந்த மாதம் உதயநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், அப்போதில் இருந்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக மூத்த அமைச்சர்களும் கூட உதயநிதி தனது தொகுதியில் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், அவர் அமைச்சரானால் மாநிலமே அவரால் பயனடையும் என்று குறிப்பிட்டனர். அமைச்சர்கள் கே. என் நேரு, மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரும் இந்த விருப்பத்தைத் தெரிவித்து உள்ளனர்.
அமைச்சராகும் உதயநிதி
இதற்கிடையே அவர் மீண்டும் இரண்டாவது முறையாக இளைஞரணி செயலாளராகவும் தேர்வானார். இருப்பினும், அமைச்சர் பதவி குறித்த அறிவிப்பு மட்டும் வரவே இல்லை. இது தொடர்பாக உதயநிதியிடம் கேட்ட போது, இந்த விஷயத்தில் முதல்வரே தக்க நேரத்தில் முடிவெடுப்பார் எனச் சொல்லிவிட்டு சைலண்டில் மோடில் இருந்துவிட்டார். இதற்கிடையே இந்த கேள்விக்கான பதில் இப்போது கிடைத்துவிட்டது. வரும் புதன்கிழமை உதயநிதி அமைச்சராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
எந்த துறை
அதன்படி வரும் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதி அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். அவருக்கு விளையாட்டுத்துறை அல்லது தற்போது முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினரான 19 மாதங்களில் தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி இடம்பெறப்போகிறார்.