பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உச்சம் - 100 ரூபாயை தாண்டியதால் கலக்கத்தில் வாகன ஓட்டிகள்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.
Recommended Video
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை நடப்பாண்டின் ஜனவரியில் இருந்து தொடர்ந்து விலையேற்றத்தை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டன. இதனால், கடந்த மார்ச் மாத இறுதியில் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐயும், டீசல் ரூ.95ஐயும் எட்டியது.
தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.103ஐ தொட்ட நிலையில், திமுக அரசு மாநிலத்திற்கான வரி வருவாயில் ரூ.3ஐ குறைத்து ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதி நிலை அறிக்கையில் அறிவித்தது. இதனால், மாநிலம் முழுவதும் பெட்ரோல் விலை ரூ.103ல் இருந்து 100 ரூபாய்க்கு கீழ் விற்பனையானது.
கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தினமும் 25 காசு முதல் 30 காசு வரையில் அதிகரித்து வருகிறது. தினசரி விலை உயர்த்தப்பட்டதால் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை தாண்டியது. அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட நிலையில் சென்னையிலும் நேற்று பெட்ரோல் விலை சதமடித்தது.
சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 100.23 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து 95.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலையை ஏற்றி மீண்டும் ரூ.100க்கும் மேல் கொண்டு வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், டீசல் விலையும் தொடர்ந்து ஏற்றம் பெற்று வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சற்றே ஆறுதல் அடைந்திருந்த மக்கள், பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாயை தாண்டி விற்பனையாவதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு எதிரொலியாக அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications