தமிழகத்தில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை - டீசல் விலை இன்று எவ்வளவு தெரியுமா
பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் விரையில் சதமடிக்கப் போகிறது பெட்ரோல் விலை. டீசல் விலையும் ஒரு லிட்டர் 92 ரூபாயை தாண்டியுள்ளது.
சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்தில் பெட்ரோல் டீசல் விலை தினசரியும் உயர்ந்து வருகிறது. மே மாதத்தில் இருந்து இன்று வரைக்கும் 25 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயை நெருங்கி உள்ளது. டீசல் விலையும் ஒரு லிட்டர் 92 ரூபாயை தாண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 98 ரூபாய் 14 பைசாவாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையைத் தவிர பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 102 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகளை கவலையடையச் செய்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை.. நேற்றைய ரேட் தொடர்கிறது
பெட்ரோல் விலையைத் தொடர்ந்து சென்னையில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 92 ரூபாய் 34 காசுகள் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் எழுந்துள்ளது. டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி ஓட்டுநர்களும், லாரி உரிமையாளர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை 16 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திலும் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதுவரை 10 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை இன்று வரை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.