"2 சிக்கல்கள்".. ஸ்டாலினுக்கு பறக்கும் ரிப்போர்ட்கள்..கடும் யோசனையில் அரசு..என்ன முடிவெடுக்க போகிறது
முழு லாக்டவுன் அமலாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: 2 வேறு வேறு சிக்கல்களில் தமிழக அரசு தத்தளித்து கொண்டிருக்கிறது.. அது தொடர்பான ஆலோசனைகளிலும் முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.
திமுக அரசு அப்போதுதான் பொறுப்பேற்றிருந்த சமயம் என்பதால், மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளானது.. உடனடியாக முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன.. இப்போது கடந்த சில நாட்களளாக கொரோனாவும் ஒமிக்ரானும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை கலங்கடித்து கொண்டிருக்கின்றன..

எண்ணிக்கை
இந்தியாவுக்குள் நுழைந்து, தமிழகத்தை தாக்கி, பாதிப்பு எண்ணிக்கையை கூட்டி, உயிரிழப்பையும் ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது.. இப்போது கொரோனா 3வது அலை தொடங்கி விட்டதாகவும் தமிழக அரசு அறிவித்தும் விட்டது. எனவேதான், தொற்றை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது... ஆனாலும் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள் சொல்வதை பார்த்தால், இப்போதைக்கு தொற்று குறையாது என்றே கணிக்கப்படுகிறது..

முழு ஊரடங்கு
அடுத்த ஓரிரு வாரங்களில், கொரோனா பாதிப்பும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.. இப்போது, ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பிலும் சற்று நிம்மதி ஏற்பட்டுள்ளது என்றாலும், பொங்கலை ஒட்டிய நாட்களில், கடை வீதிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூடும் கூட்டங்களால் கொரோனா பரவல் மேலும் வேகமெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதுமே இந்த நாட்களில் கடை வீதிகளில் கூட்டம் பெருமளவில் கூடும்..

மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கலுக்கு சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மக்கள் பெருமளவில் திரள்வர். மாட்டுப் பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு போன்ற நிகழ்ச்சிகள், தென் மாவட்டங்களில் அதிகளவில் நடக்கும். இவற்றை அனுமதித்தால், கொரோனா பரவல் மிகவும் அதிகமாகும் என்பது உறுதி. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 விதமான குழப்பங்கள் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது... அதன்படி, கொரோனா மற்றும் ஒமைக்கிரான் தாக்கம் குறித்து தினசரி ரிப்போர்ட்டுகளை கண்காணித்து வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளனராம்.

ஊழியர்கள்
குறிப்பாக, பொங்கல் பண்டிகை முடிந்தததும் தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்கள் மட்டும் பொது ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று சொல்லியுள்ளனராம். அதனால் பொங்கல் பண்டிகை முடிந்ததும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வி அரசு ஊழியர்களிடையே பரவி வருகிறது.. தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர அதிகம் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், தொற்றை தடுக்க அது உதவும் என்றாலும், லாக்டவுன் காரணமாக, தமிழக அரசுக்குதான் நெருக்கடிகள் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

தேர்தல் நடக்குமா?
அடுத்ததாக, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.. மேலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் ஆளுங்கட்சி மீது மக்களிடம் அதிருப்தி இருந்து வருகிறது... தேர்தலை நடத்தாவிட்டால் மக்களிடம் ஏற்படும் அதிருப்தி, தேர்தல் வெற்றியை பாதிக்குமென்றும் ஆளும்கட்சி தரப்பில் கருதப்படுகிறது.

விரைவில் முடிவு?
எனவே, இதற்கான ஆலோசனையும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது... மற்றொரு புறம், கொரோனாவை காரணம் காட்டி நகராட்சி தேர்தலை தள்ளி வைக்கலமா என்ற குழப்பத்திலும் திமுக அரசு உள்ளது. ஆக, பொங்கல் முடிந்ததும் முழு லாக்டவுன் போடப்பட்டுவிடுமா? அல்லது எதிர்பார்த்தபடியே தேர்தல் நடக்குமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்தெல்லாம் விரைவில் அரசு முடிவெடுக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications