விநாயகர் சதுர்த்தி: ஒரே நாளில் 1.21 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்-பேருந்துகளில் மக்கள் கூட்டம்!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு. சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 1.21 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. சென்னையில் இருக்கும் வெளியூரைச் சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். இதற்காக, அரசு பேருந்து, ரயில் ஆம்னி பேருந்துகளில் சில தினங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தனர். ஒரு சிலர் வெளியூர் செல்வதற்காக நேரடியாகவே பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.
வெளி மாவட்ட மக்களுக்காக தமிழக அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் 2,200 பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக 236 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன, இதில் 9,507 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்தனர். நேற்று முன்தினம் காலை முதல் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கினர். குறிப்பாக, மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை, பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இந்த பஸ்கள் மூலம் நேற்று ஒரேநாளில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 800 பேர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர்.
இந்நிலையில், கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் நேற்று அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டன. சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரைக்கு ரூ.1,300, திருச்சிக்கு ரூ.1,200, சேலத்துக்கு ரூ.900 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள், தனியார் வாகனங்கள் மூலம் சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு ரூ.700 முதல் ரூ.900 வரை கொடுத்து பயணம் செய்தனர்,
இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஒரே நேரத்தில் கோயம்பேடு வந்ததால் மாநகர பேருந்து, ஆட்டோ, கால்டாக்சி போன்றவற்றிலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்பட்டது. மேலும் எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். அனைத்து ரயில்களிலும் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.