அனுமதியில்லாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது - மீறினால் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை!
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் அனுமதி இல்லாத இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ள தமிழக போலீசார், அவ்வாறு மீறி சிலைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்ப்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்தன. பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு திரும்ப பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்து முன்னணி அமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகளும், சென்னையில் 5 ஆயிரம் சிலைகளும் அமைத்து பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், விநாயகர் சிலைகள் அமைப்பது தொடர்பாக தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி ஐஜிக்கள், போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்கள் இந்த அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து காவல்துறை கூறியதாவது: எற்கனவே வழங்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த வேண்டும். புதிதாக வேறு எந்த இடங்களிலும் சிலைகள் அமைக்கவோ, வழிபாடு நடத்தவோ கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். குடியிருப்பின் அருகே சிலை வைக்கப்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சாலையில் வைக்கப்பட்டால் மாநகராட்சியிடமும், நெடுஞ்சாலைக்குட்பட்ட பகுதியில் இருந்தால் நெடுஞ்சாலைத்துறையிடம் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். குறிப்பாக, விநாயகர் சிலைகளை திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லும் போதும் எந்தவித ஆசம்பாவிதங்களும் நடைபெறாமல் அமைதியாக நடக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications